என்னா சோம்பேறித்தனம்.. திருடி விட்டு ஹாயாக தூங்கிய திருடன்... போட்டோ எடுத்த பிறகு எழுப்பிய போலீஸ்!
புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடாவில், வீட்டுக்குள் புகுந்த ஒரு நபர் அங்கு திருடியுள்ளார். பின்னர் ஹாயாக மெத்தையில் படுத்துத் தூங்கி விட்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், அந்த நபர் தூங்கி விதத்தைப் பார்த்து முதலில் போட்டோ எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் எழுப்பி, முகம் கழுவி கைது செய்து அழைத்துச் சென்றனர்.
சோம்பேறித்தனம் எவ்வளவு தப்பு என்பதற்கு இந்த சம்பவம்தான் நல்ல உதாரணம். சுறுசுறுப்பாக இருந்தால்தான் எதிலும் வெல்ல முடியும்.. இல்லாவிட்டால் திருட்டுக்குக் கூட லாயக்கில்லை என்பதை இந்த திருடர் நிரூபித்துள்ளார்.
அந்தத் திருடனின் கதையைப் பார்ப்போம் வாருங்கள்...!
29 வயது டியார் டேவிஸ்
அந்த நபரின் பெயர் டியார் டேவிஸ். 29 வயதாகிறது. இவர்தான் இப்படித் தூக்கம் போட்டு இப்போது கம்பி எண்ணுகிறார்.
வீடு புகுந்து திருட்டு
டேவிஸ், ஒரு வீட்டுக்குள் நைஸாக புகுந்துள்ளார். அங்கு அந்த வீட்டின் உரிமையாளரின் படுக்கை அறைக்குப் போன அவர் அங்கிருந்த தங்க, வெள்ளி நகைகளைத் திருடிக் கொண்டார்.
அட எத்தாத்தண்டி பெட்டு...!
பின்னர் படுக்கை அறையில் இருந்த மெத்தையைப் பார்த்த அவர், அடடா எவ்வளவு பெரிதாக, அழகாக இருக்கிறது என்று வியந்தார். அப்படியே படுத்தார்.. தூங்கி விட்டார்!
பயபுள்ளைக்குக் கிடைச்ச பையைப் பாருங்களேன்..!
டேவிஸ் தான் திருடிய நகைகளை ஒரு சாதாரண பிளாஸ்டிக் பையில் போட்டு கையில் பிடித்தபடி படுக்கையில் படுத்துக் கிடந்தார்.
வேலைக்காரம்மா வந்து பார்த்து...
காலையில் அந்த வீட்டின் பணிப்பெண் தனது வேலையைப் பார்க்க வந்துள்ளார். வந்தவர் பெட்ரூமில் சம்பந்தமே இல்லாமல் ஒரு நபர் தூங்கிக் கொண்டிருப்பதை அறிந்து போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்.
விருட்டென வந்த போலீஸ்
அது அமெரிக்க போலீஸாச்சே.. வேகமாக வந்து சேர்ந்தனர். பெட்ரூமுக்குள் வந்த அவர்கள் டேவிஸ் தூங்கிய ஸ்டைலைப் பார்த்து ஆச்சரியமடைந்தனர். அதைத் தொடர்ந்து முதலில் கேமராவை எடுத்து டேவிஸை விதம் விதமாக போட்டோ எடுத்தனர். அதன் பின்னர் அவரை எழுப்பினர்.
முகத்தைக் கழுவுங்க பாஸ்.. ஜெயிலுக்குப் போகலாம்
அதன் பின்னர் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்று வழக்குப் பதிவு செய்தனர். இப்போது டேவிஸ் தூங்குவது தங்களது பேஸ்புக் பக்கத்திலும் போலீஸார் போட்டுள்ளனர்.