அபுதாபி அருகே விபத்து... மெக்காவுக்கு புனித பயணம் சென்ற 3 இந்தியர்கள் பலி- 57 பேர் காயம்
துபாய்: மெக்காவுக்கு புனித பயணம் சென்ற இந்தியர்கள் பயணித்த பஸ் விபத்துக்குள்ளாகி 3 பேர் உயிரிழந்தனர், 57 பேர் காயமடைந்தனர்.
துபாயில் வேலை பார்த்து வரும், கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களை சேர்ந்த முஸ்லிம்கள் சுமார் 60 பேர் சேர்ந்து மெக்காவுக்கு புனித யாத்திரை சென்றனர். கடந்த 6ம் தேதி கிளம்பிய அவர்கள், சனிக்கிழமை மாலையில், மெக்காவில் இருந்து தாங்கள் பயணித்த பஸ்சிலேயே துபாய் திரும்பினர்.
அந்த பஸ், அபுதாபி நகரில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அபு அல் அப்யாத் என்ற பகுதியில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணித்த முகமது மவுலவி (40), அபு பக்கிர் (46) மற்றும் அப்துல் லத்தீப் (38) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த எஞ்சிய 57 பேரில், 12 பேர் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பஸ்சை ஓட்டிச் சென்றது அப்துல் லத்தீப் ஆகும். இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். அவர்கள் கேரளாவிலுள்ளனர். மவுலவிக்கும், மனைவியும், 3 குழந்தைகளும் கேரளாவிலுள்ளனர். சம்பவம் நடந்த அன்றுதான், லத்தீப் தனது குடும்பத்தாருக்கு போன் செய்து, பயணத்தில் கிடைத்த நல்ல அனுபவங்களை கூறி மகிழ்ந்துள்ளார். மேலும், அடுத்த மாதம் சொந்த ஊர் வருவதாகவும், வீட்டு புதுமனை புகுவிழாவை முடிப்பதுடன், தனது 28 நாள் கைக்குழந்தையை பார்க்க விரும்புவதாகவும் போனில் கூறியுள்ளார்.
அபு பக்கீருக்கு மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர். அவர், இந்த சுற்றுலாவின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுள்ளார். டிரைவரின் அஜாக்கிரதை இந்த விபத்துக்கு காரணம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். ஹஜ் மாதத்தை தவிர்த்து பிற மாதங்களில் மெக்காவுக்கு புனித யாத்திரை செல்லுவது, உம்ரா என்றழைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications