சண்டை வேண்டாம்.. இந்தியாவிடம் இறங்கி வந்த கனடா.. ஜி 7 மாநாட்டுக்கு வாங்க.. மோடியிடம் பேசிய கார்னி
ஒட்டாவா: ஜி - 7 நாடுகளின் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டை இந்த முறை கனடா தலைமையேற்று நடத்துகிறது. ஜூன் 15 முதல் 17 வரை 3 நாட்கள் இந்த மாநாடு கனடாவின் கனனாஸ்கிஸ் நகரில் நடைபெற உள்ளது. கனடாவுக்கும், நமக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதால் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தான் ‛மோதலை மறப்போம். ஜி 7 உச்சி மாநாட்டுக்கு வாங்க' என்று கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்துள்ளார்.
ஒவ்வொரு நாடுகளும் தங்களின் வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக பிற நாடுகளுடன் கூட்டமைப்புகளை ஏற்படுத்தி உள்ளன. அந்த வகையில் உலக நாடுகள் மத்தியில் முக்கிய கூட்டமைப்பாக இருப்பது ஜி 7 நாடுகள்.

இந்த ஜி 7 கூட்டமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கனடா ஆகிய ஏழு நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் நம் நாடு இடம்பெறவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் ஜி 7 உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த உச்சி மாநாட்டை ஜி 7 கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு நாடுகள் தலைமையேற்று நடத்தும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜி 7 உச்சி மாநாட்டை கனடா தலைமையேற்று நடத்துகிறது. கனடாவில் உள்ள கனனாஸ்கிஸ் நகரில் வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை 3 நாட்கள் இந்த ஜி 7 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
பொதுவாக இத்தகைய மாநாடு நடக்கும்போது அந்த மாநாட்டை தலைமையேற்று நடத்தும் நாடு, தங்களின் நட்பு நாடுகளை சிறப்பு விருந்தினராக அழைக்கும். அந்த வகையில் நம் நாடு ஜி7 கூட்டமைப்பில் உறுப்பினராக இல்லாமல் இருந்தாலும் கூட கடந்த 6 ஆண்டுகளாக பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று வந்தார். இதற்கு ஜி 7 கூட்டமைப்பில் உள்ள பிற நாடுகள் உடனான நட்பு தான் முக்கிய காரணம்.
ஆனால் இந்த முறை பிரதமர் மோடிக்கு கனடாவில் இருந்து அழைப்பு என்பது வராமல் இருந்தது. இதற்கு நம் நாட்டுக்கும், முந்தைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் இடையேயான மோதல் தான் காரணம் என்று கூறப்பட்டது. இதனால் கடந்த 6 ஆண்டுகளில் முதல் முறையாக பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்கமாட்டார் என்ற தகவல் வெளியானது. இப்படியான சூழலில் தான் கனடா பிரதமர் மார்க் கார்னி, பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அதோடு ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும்படி பிரதமர் மோடிக்கு, மார்க் கார்னி அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாட்டுக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு அழைப்பு வந்துள்ளது. இன்று தான் கனடா பிரதமர் மார்க் கார்னி போன் செய்துள்ளதால் பிரதமர் மோடி மாநாட்டில் பங்கேற்பாரா? இல்லாவிட்டால் நம் நாட்டின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பாரா? என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதுபற்றி வரும் நாட்களில் மத்திய அரசு அறிவிக்கும்.
ஏற்கனவே ஜி 7 நாடுகளை தவிர ஆஸ்திரேலியா, உக்ரைன், தென்ஆப்பிரிக்கா, உக்ரைன், பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு கனடா அழைப்பு விடுத்து விட்டது. ஆனால் பிரதமர் மோடிக்கு இந்த அழைப்பு தாமதமாக வருவதற்கு முக்கிய காரணம் கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தான். இவரால் தான் இருநாடுகள் இடையேயான உறவு என்பது பாதிக்கப்பட்டது. அதாவது கனடாவை எடுத்து கொண்டால் அங்கு சீக்கியர்கள் அதிகம் உள்ளனர்.
இதில் பெரும்பாலானவர்கள் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர். ஓட்டு வங்கி அரசியலுக்காக கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் சீக்கியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தார். மேலும் இந்தியா மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். கனடாவில் வசித்த காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் இந்தியா உள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதனை நம் நாடு முற்றிலுமாக மறுத்தது. ஆனாலும் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் தற்போது வரை சரியாகவில்லை.
ஆனால் சமீபத்தில் கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார். அதன்பிறகு அவரது லிபரல் கட்சியை சேர்ந்த மார்க் கார்னி இடைக்கால பிரதமராக செயல்பட்டார். சில வாரங்களுக்கு முன்பு நடந்து முடிந்த கனடா நாடாளுமன்ற தேர்தலில் மார்க் கார்னி லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் அடிப்படையில் பொருளாதார நிபுணர். இவர் தற்போது அமெரிக்காவை தவிர பிற நாடுகளுடன் நட்பு பாராட்ட தயாராகி வருகிறார். இதனால் தான் மோதல் வேண்டாம். ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க வாருங்கள் என்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications