தட்டி தூக்கிய கனடா போலீஸ்! ஒரே நாளில் முடிவுக்கு வந்த டிரக் ஓட்டுநர்கள் போராட்டம்.. என்ன நடந்தது
ஒட்டாவா: கனடாவில் வேக்சின் கட்டாயம் என்ற அறிவிப்புக்கு எதிராக நடைபெற்று வந்த டிரக் ஓட்டுநர்கள் போராட்டம் தலைநகர் ஒட்டாவாவில் முடிவுக்கு வந்துள்ளது.
உலகை ஆட்டி படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு எதிரான ஒரே ஆயுதமாக வேக்சின் தான் பார்க்கப்படுகிறது. பல்வேறு நாடுகளும் வேக்சின் போடுவதைக் கட்டாயமாக்கி வருகின்றனர்.
பெரும்பாலான நபர்கள் ஆர்வமுடன் வேக்சின் போட்டுக் கொண்டாலும் கூட சிலர் வேக்சின் செலுத்தத் தொடர்ந்து தயக்கம் காட்டியே வருகின்றனர். இதனால் உலக நாடுகள் பல கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது.

போராட்டம்
அதன்படி கனடா நாட்டில் வேக்சின் போட்டுக் கொள்ளாத டிரக் ஓட்டுநர்களுக்கு எதிராகக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. அதாவது அந்நாட்டின் டிரக் ஓட்டுநர்கள் அமெரிக்கா- கனடா எல்லையைக் கடக்கும் போது கட்டாயம் வேக்சின் போட்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு அந்நாட்டின் டிரக் ஓட்டுநர்களில் ஒரு பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். கனடா தலைநகர் ஒட்டாவாவை முற்றுகையிட்டுள்ள டிரக் ஓட்டுநர்கள், அங்கேயே தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டுத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கனடா தலைநகரில் தொடர்ந்து அமைதியற்ற சூழல் நிலவி வந்தது.

போலீஸ் ஆப்ரேஷன்
டிரக் ஓட்டுநர்கள் போராட்டம் பல நாட்கள் தொடர்ந்தது. முதலில் இந்த விவகாரத்தில் அமைதி காத்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தை ஒடுக்க அவசர நிலையை அறிவித்தார். மேலும், போராட்டக்காரர்களுக்குச் செல்லும் நிதியுதவியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். இருப்பினும், போராட்டம் தொடர்ந்த நிலையில், தலைநகர் ஓடாவாவில் குடியிருந்த போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் கனடா போலீசார் ஈடுபட்டனர்.

தள்ளுமுள்ளு
கனடா நாடாளுமன்றத்திற்கு முன்பு போராட்டம் நடத்தி வந்த டிரக் ஓட்டுநர்களை போலீசாரை அப்புறப்படுத்தினர். அப்போது டிரக் ஓட்டுநர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இருப்பினும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான டிரக் ஓட்டுநர்களை போலீசார் அங்கிருந்து வெற்றிகரமாக அப்புறப்படுத்தினர். ஒட்டாவா நகரில் நிறுத்தப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட டிரக் லாரிகளையும் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

போலீசார்
மேலும், அங்கு போராட்டக்காரர்கள் அமைத்திருந்த தற்காலிக கூடாரங்களையும் போலீசார் அப்புறப்படுத்தினர். இதன் மூலம் பல நாட்களாகக் கனடா தலைநகரில் ஏற்பட்டிருந்த அமைதியற்ற சூழல் முடிவுக்கு வந்துள்ளது. டிரக் ஓட்டுநர்களின் இந்தப் போராட்டத்திற்கு முதலில் பொதுமக்களிடையே ஆதரவு இருந்தது. இருப்பினும், ஹாரன் அடித்தும் பொதுமக்கள் செல்லும் வழியை மறித்தும் அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் அங்கு வசிக்கும் மக்களும் அதிருப்தி அடைந்தனர்.
Recommended Video

போராட்டம் தொடரும்
டிரக் ஓட்டுநர்களுக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் உள்ளதாகக் கருத்துக்கணிப்புகளில் தெரிய வந்த பின்னரே, கனடா போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், போராட்டக்காரர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. கனடா அரசின் சர்வாதிகார கட்டுப்பாடுகளுக்கு எதிராகப் போராட்டம் தொடரும் என்று டிரக் ஓட்டுநர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications