அன்பானவள் அழகானவள் அசராதவள்.. (மீண்டும்) வைரலாகும் ஒரு பாசத்தாயின் போட்டோ
லஷின்: கனடாவில் பெண் ஒருவர் தன்னுடைய திருமண சம்பிரதாயங்கள் நடந்து கொண்டிருக்கும்போதே தனது குழந்தைக்கு பால் கொடுத்தபோது எடுத்த புகைப்படம் தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது.
பெற்ற குழந்தைக்கு தாய்ப்பாலே உணவு மற்றும் மருந்து என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் நவீன அம்மாக்கள் சிலர் குழந்தைக்கு தாய்ப் பால் கொடுத்தால் தங்களின் அழகு கெட்டுவிடும் என்று நினைக்கிறார்கள்.
அழகும், உடல் கட்டும் கெட்டுவிடும் என்று நினைத்து சிலர் தான் பெற்ற குழந்தைக்கே பால் கொடுப்பது இல்லை. இந்நிலையில் கனடாவில் 30 வயது கிறிஸ்டினா டொரினோ பென்டன் என்பவர் தனது காதலரை கடந்த ஜூன் மாதம் தேவாலயத்தில் வைத்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
பாதிரியார் திருமணச் சடங்குகளை செய்து கொண்டிருக்கும்போது கிறிஸ்டினாவின் 9 மாத கைக்குழந்தை ஜெம்மா பசியால் அழத் துவங்கியது. உடனே கிறிஸ்டினா ஓடி வந்து குழந்தைக்கு பால் கொடுத்தார். பாதிரியார் அவர் பாட்டிற்கு சடங்கை செய்து முடித்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
திருமண சடங்குகள் முக்கியம் என்றாலும் குழந்தை தான் முக்கியம் என ஓடி வந்து தாய்ப்பால் கொடுத்த அந்த அன்புத் தாயின் புகைப்படம் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியாகி பலரின் பாராட்டை பெற்றது. தற்போது அந்த புகைப்படம் மீண்டும் வைரலாகியுள்ளது.