சோமாலியா தலைநகரில் கார் குண்டு வெடிப்பு: 11 பேர் பலி; 16 பேர் படுகாயம்
சோமாலியா நாட்டின் தலைநகரில் இன்று நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 11 பேர் உயிரிழந்தனர்
மொகடிஷூ: சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷூவின் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர்.
மொகடிஷூவின் வபேரி மாவட்டத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டின் அருகே இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. காருக்குள் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியதில் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டனர். பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் ரத்தவெள்ளத்தில் துடித்தனர்.
இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 16 பேர் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. தலைநகரில் இதுபோன்ற தாக்குதலை தொடர்ந்து நடத்தி வரும் அல் ஷபாப் அமைப்பு, இந்த தாக்குதலையும் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சோமாலியாவில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்று வரும் ஆட்சியை கலைக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற தாக்குதலில் அல்-ஷபாப் அமைப்பையினர் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.