நல்லாத்தான போய்கிட்டு இருந்துச்சி... ஜிபிஎஸ் சொன்னபடி கார் ஓட்டி நடு தண்டவாளத்தில் சிக்கிய வாலிபர்!
மெல்போர்ன்: ஜிபிஎஸ் சிக்னல் கூறியதை நம்பிக்கொண்டு கார் ஓட்டிச்சென்ற ஆஸ்திரேலிய வாலிபர் நடு தண்டவாளத்தில் சென்று சிக்கி, காரில் இருந்து இறங்கி தலைதெறிக்க ஓடி உயிரை காப்பாற்றிய சம்பவம் தொழில்நுட்பத்தின் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
மெல்போர்னை சேர்ந்தவர் 25 வயதான ராபர்ட். இவர், நேற்று ஆஸ்திரேலிய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தனது காரில், தனது வீடு அமைந்துள்ள தீர் பார்க் பகுதியில் இருந்து, காரை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது, போகும் இடத்தின் வழியை கண்டுபிடிக்க காரில் ஜிபிஎஸ் வசதியை, ஆன் செய்திருந்தார்.

ஜிபிஎஸ் காண்பித்த வழியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, மெல்போர்ன் நகரின் இன்னர்-நார்த் பகுதியில், சென்ற ராப்ர்ட் தவறுதலாக ரயில்வே தண்டவாளத்தில் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். இரவு நேரம் என்பதால் சற்று தாமதமாகத்தான் தண்டவாளத்தில் வண்டி செல்வதை கவனித்துள்ளார். அதேநேரம், ரயில் ஒன்று வேகமாக வந்ததையும் ராபர்ட் பார்த்துள்ளார்.
உடனடியாக வண்டியை பின்நோக்கி எடுக்க முயன்றார். ஆனால், வாகனம் அங்கேயே மாட்டிக்கொண்டது. உடனடியாக உயிரை காப்பாற்றிக்கொள்ள, காரை விட்டுவிட்டு வெளியே ஓடிவந்துள்ளார். ரயிலில் மோதிய கார் சுமார் 15 மீட்டர் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதில் அந்த பயணிகள், ரயிலில் இருந்த 13 பேர் லேசான காயமடைந்தனர்.
நம்மூரிலும் ஜிபிஎஸ்சை நம்பி வாகனம் ஓட்டுவோர் பெருகிவிட்டனர். இந்நிலையில் அவர்களுக்கு ஆஸ்திரேலிய சம்பவம் ஒரு பாடமாக இருப்பது நல்லது.












Click it and Unblock the Notifications