ஜப்பான் கப்பலில் உள்ள 138 இந்தியர்களை மட்டும் மீட்க முடியாது.. மத்திய அரசு
Recommended Video
டெல்லி: ஜப்பான் கப்பலில் ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கும் போது 138 இந்தியர்களை மட்டும் மீட்க முடியாது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
ஹாங்காங்கிலிருந்து 3700-க்கும் மேற்பட்டோருடன் ஒரு கப்பல் ஜப்பான் சென்று கொண்டிருந்தது. கொரோனா பீதியால் அந்த கப்பல் யோக்கோஹாமா துறைமுகம் அருகே நடுக்கடலில் பிப்ரவரி 5-ஆம் தேதி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் உள்ள 135 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

கோரிக்கை
இந்த கப்பலில் 138 இந்தியர்கள் உள்ளனர். கொரோனா பாதித்த மக்கள் தனிமைப்படுத்தப்படாததால் தங்களை இந்திய அரசு உடனடியாக மீட்க வேண்டும் என இந்தியர்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். மேலும் கப்பலில் சுத்தம் கடைப்பிடிக்கப்படாததால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

காப்பாற்றுதல்
இதனால் தங்களை காப்பாற்ற கோரி மேற்கு வங்கத்தை சேர்ந்த பினய் குமார் பிரதமர் மோடிக்கும் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்தார். மேலும் தாங்கள் உயிரோடு இருப்போமா இல்லையா என தெரியவில்லை என கண் கலங்கினார். அதுபோல் கப்பலில் உள்ள மதுரையைச் சேர்ந்த அன்பழகனும் தங்களை காப்பாற்றுமாறு வீடியோ வெளியிட்டுள்ளார்.

வெளியுறவுத் துறை அமைச்சர்
அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த் , கமல்ஹாசன், அஜித், விஜய் உள்ளிட்டோரையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவர் என்றும் அவர்களோடு ஜப்பானுக்கான இந்திய தூதரகம் தொடர்பில் உள்ளது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.

மீட்க முடியாது
இந்த நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், ஜப்பான் அரசின் விதிகளின்படி கப்பலில் உள்ள மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வைரஸ் பாதித்தவர்கள் ஜப்பான் அதிகாரிகளால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் பிப்ரவரி 19-ஆம் தேதி வரை தனிமைப்படுத்தப்படுவர். கப்பலில் ஆயிரக்கணக்கானோர் உள்ள நிலையில் எங்கள் மக்களை மட்டும் மீட்க வேண்டும் என நாம் சொல்ல முடியாது என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications