இனி எச்-1பி விசா வாங்க முடியாது.. டிரம்ப்பின் திட்டம்.. உண்மையை வெளிக்கொண்டு வந்த தனியார் அமைப்பு
எச்-1பி விசாவை இனி எளிதாக பெற முடியாத அளவிற்கு அதில் பல சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்பட இருக்கிறது.
நியூயார்க்: எச்-1பி விசாவை இனி எளிதாக பெற முடியாத அளவிற்கு அதில் பல சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்பட இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவை சேர்ந்த ஐடி பணியாளர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் மனைவிகளுக்கு அமெரிக்காவில் வேலை வழங்கக்கூடாது என்று சட்டம் குறித்த அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த புதிய அறிவிப்பு அமெரிக்காவில் இருக்கும் இந்திய மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இது குறித்து உலக முழுக்க இருக்கும் 'பிராக்மோன்' என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. மேலும் என்ன மாதிரியான மாற்றங்கள் வரும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
டிரம்ப்
2015 வரை எச்-1பி விசா பெறுவதில் இந்தியவர்களுக்கு பெரிய அளவில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் டிரம்ப் அதிபராக வந்த பின் எச்-1பி விசா சட்டத்தில் நிறைய மாற்றங்கள் வந்தது. இதனால் பல இந்திய மக்கள் வேலை இழப்பார்கள் என்று கூறப்பட்டது.
உண்மைதான்
தற்போது இதுகுறித்து அமெரிக்காவிலும், உலகின் பல முக்கிய நகரங்களிலும் இயங்கும் 'பிராக்மோன்' என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இது மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வது குறித்த தகவல்கள் அளிக்கும் அமைப்பு ஆகும். அதன்படி அமெரிக்க எச்-1பி விசா முறையில் சீக்கிரமே பெரிய மாற்றம் வரும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
மாற்றம் என்ன
இந்த மாற்றத்தின் படி எச்-1பி விசா பெறுவதற்கு முன்பு போல எளிதாக விண்ணப்பிக்க முடியாது. எச்-1பி விசா விண்ணப்பிப்பதற்கு முன்பே சில படிநிலைகளை தாண்டி வர வேண்டும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. மேலும் மிகவும் அதிக திறன் கொண்ட பணியாட்களை மட்டுமே இந்த விசா வழங்கபடும் என்றும் சட்ட திருத்தம் செய்யப்பட இருக்கிறது.
எப்போது
அமெரிக்க அதிகாரிகள் இதுகுறித்து கூறும் போது வரும் பிப்ரவரி வரை இந்த சட்டம் அமலுக்கு வர வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் அந்த நிறுவனம் தன் அறிக்கையில் கண்டிப்பாக ஜனவரி இறுதியில் இந்த சட்டம் வர வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளது. இதனால் அங்கு வேலை செய்ய விண்ணப்பித்து இருக்கும் பலருக்கு வேலை கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.