பதட்டத்தில் சோட்டா ராஜன்.. தொடர்ந்து தம்மடித்து டென்ஷனைக் குறைத்துக் கொண்டிருக்கிறாராம்!
பாலி: இந்தியாவுக்கு தான் நாடு கடத்தப்பட்டதும் தனக்கு என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் உள்ளாராம் சோட்டா ராஜான். இந்தியா வர தனக்கு விருப்பம் இல்லை எனவும் அவர் இந்தோனேசியா போலீஸாரிடம் கூறி வருகிறாராம்.
இந்தியாவில் பல வழக்குகளில் தொடர்புடைய பிரபல நிழல் உலக தாத சோட்டா ராஜன் இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாதலமான பாலி விமான நிலையத்தில் வந்திறங்கிய போது நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து சோட்டா ராஜனை இந்தியாவிடம் ஒப்படைக்க இந்தோனேஷியா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இரு நாட்டு அதிகாரிகளும் பேசி வருகிறார்கள். இந்த வார இறுதிக்குள் மும்பை போலீசாரும், சி.பி.ஐ. அதிகாரிகளும் இந்தோனேஷியா செல்கிறார்கள். அதன் பிறகு சோட்டா ராஜன் இந்தியா அழைத்து வரப்படுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சோட்டா ராஜனிடம் டென்பசார் போலீஸ் நிலையத்தில் பாலித்தீவு போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து பாலி போலீஸ் கமிஷனர் நைன்கோலன் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், சோட்டா ராஜன் ஜிம்பாப்வே செல்ல விரும்புவதாகவும். இதற்கு முன்னதாக ஜிம்பாவே மற்றும் ஆஸ்திரேலியாவில் அவர் வசித்து வந்ததாக தெரிவித்தார். மேலும் ராஜன் தன்னை விடுதலை செய்யும்படி தங்களிடம் கேட்டதாகவும், இந்தியா செல்ல தாம் விரும்பவில்லை எனவும் தெரிவித்ததாகவும் நைன்கோலன் கூறினார்.
இதனிடையே கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சினைகளால் அவதிப்படுவதாக சோட்டா ராஜன் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் பயத்துடன் இருப்பதாகவும், இடைவிடாமல் சிகரெட் புகைப்பதாகவும் அவரை பரிசோதித்த மருத்துவர் தெரிவித்தார். .
சோட்டா ராஜன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. நேபாள நாட்டில் அவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. பெரும்பாலான வழக்குகள் மும்பை மாநகர போலீசில்தான் பதிவாகி உள்ளது.
சோட்டா ராஜனுக்கு சுஜாதா என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். தற்போது 50 வயதாகும் சுஜாதா மும்பையில் சில நிறுவனங்களை நடத்தி வருகிறார். 2006-ல் அவர் பண மோசடி செய்ததாக மும்பை போலீஸில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications