தீவிரவாதிகளுக்காக பேனா பிடிக்கும் கையில் கத்தி.. பிணையாளிகள் கழுத்தை அறுக்கும் மாணவிகள்?
லாகோஸ்: நைஜீரியாவில் உள்ள சிபோக் நகரில் இருந்து போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் பிணையக் கைதிகளின் கழுத்தை அறுத்து கொலை செய்வது தெரிய வந்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள போர்னோ மாநிலத்தில் இருக்கும் சிபோக் நகரில் இருந்து 219 பள்ளி மாணவிகளை போக்கோ ஹரம் தீவிரவாதிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடத்திச் சென்றனர். மாணவிகளுக்கு என்ன ஆனது என இத்தனை நாட்களாக தெரியாமல் இருந்தது. இந்நிலையில் தீவிரவாதிகள் மாணவிகளை மூளைச்சலவை செய்து வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
பேனா பிடிக்க வேண்டிய கையில் பள்ளி மாணவிகள் துப்பாக்கிளை பிடித்துக் கொண்டு சுற்றுகிறார்கள். மேலும் அவர்கள் குர்ஆன் வசனங்களை ஒப்பிக்காதவர்களை சாட்டையால் அடிப்பதுடன், பிணையக் கைதிகளின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்து வருகிறார்கள்.
இந்த தகவலை கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் தங்கியிருந்த இடத்தில் இருந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் பள்ளி மாணவிகளும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட அவர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாக முன்பு தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்கோ ஹரம் தீவிரவாதிகள் போர்னோ மாநிலத்தில் 150 முஸ்லீம்களை கொலை செய்து 3 கிராமங்களுக்கு தீ வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.