சீனாவில் பயங்கரம்: ரயில் நிலையத்தில் மர்ம நபர்கள் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 33 பேர் பலி
பெய்ஜிங்: சீனாவில் ரயில் நிலையத்தில் புகுந்த 10 பேர் கொண்ட மர்மக் கும்பல் நடத்திய திடீர் கத்திக்குத்துத் தாக்குதலில் 33 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாகப் பலியானார்கள். மேலும், இத்தாக்குதலில் படுகாயமடைந்த 130 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டுள்ளனர்.
சீனாவில் உள்ள தென்மேற்கு பகுதியில் இருக்கும் யுன்னான் மாகாணத்தில் உள்ள குன்மிங் ரயில் நிலையத்தில் நேற்றிரவு சுமார் 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று கைகளில் கத்திகளுடன் நுழைந்து அங்கிருந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்தத் திடீர்த் தாக்குதலை சற்றும் எதிர்பாராத மக்கள் பயத்தில் அலறி உயிரைப் பாதுகாத்துக் கொள்ள சிதறி ஓடியுள்ளனர். ஆனபோதும், இத்தாக்குதலில் 33 அப்பாவி பொது மக்கள் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தாக்குதலில் காயமடைந்த 130 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப் பட்டுள்ளனர். தாக்குதல் சம்பவம் குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் நான்கு சதிகாரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ஒருவர் உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கறுப்பு நிற உடை அணிந்திருந்த மர்ம நபர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக என்று கூறப்படுகிறது. சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள பிரிவினைவாத குழுவினர் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவத்திற்கு சீன அதிபர் ஷி ஜிங்பி மற்றும் பிரதமர் லி கெஹியாங், ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications