சீன டியான்ஜின் துறைமுக சேமிப்பு கிடங்கில் வெடி விபத்து- பலி எண்ணிக்கை 44ஆக உயர்வு
பீஜிங்: சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டியான்ஜின் நகர துறைமுக சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 20 பேர் பலியாகினர். இந்நிலையில் மேலும் 22 பேர் மருத்துவமனையில் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
இங்குள்ள எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை அடுக்கி வைத்திருந்த சேமிப்பு கிடங்கில் உள்ளூர் நேரப்படி நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட சிறிய தீவிபத்தையடுத்து, சுமார் 11.30 மணியளவில் அடுத்தடுத்து மர்மப் பொருட்கள் வெடித்துச் சிதறின.
இதைத் தொடர்ந்து வெகு தூரம்வரை சிதறி விழுந்த தீக்கோளங்களால் அருகாமையில் உள்ள சில நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டிடங்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின.
இதனால், அந்த துறைமுகப் பகுதி முழுவதும் பெருந்தீ மற்றும் புகை மூட்டத்தால் சூழப்பட்டது. பற்றி எரியத் தொடங்கிய கட்டிடங்களில் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடிகளும், சலவைக்கற்களும் வெப்பம் தாங்காமல் பல மீட்டர் தூரத்துக்கு வெடித்துச் சிதறின.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சுமார் 50 தீயணைப்பு வாகனங்களுடன் நூற்றுக்கணக்கான மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விடிய, விடிய தீயை அணைக்க முயன்றும், காட்டுத்தீ போல பரவி வரும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அவர்கள் போராடி வருகின்றனர்.
இன்று அதிகாலை நிலவரப்படி இவ்விபத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்த சுமார் 20 பேர் உடல்கள் மீட்கப்பட்டது. சுமார் 400 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் மருத்துவமனையில் மேலும் 22 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்றுவரும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.