தென்சீனா கடலுக்கு உரிமையில்லையா? கேலிக்கூத்தான தீர்ப்பு.... சாடும் சீனா! விமான நிலையங்களில் சோதனை!!
பெய்ஜிங்: தென்சீனா கடற்பரப்பில் தங்களுக்கு உரிமையே இல்லை என்று சர்வதேச தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பு கேலிக்கூத்தானது என்று சீனா சாடியுள்ளது. அத்துடன் தென்சீனா கடற்பரப்பில் அமைத்துள்ள 2 புதிய விமான நிலையங்களில் சர்வதேச தீர்ப்பை மீறி சோதனை நடத்தியுள்ளது சீனா. இதனால் தென்சீனா கடற்பரப்பில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தென்சீனா கடற்பரப்பு முழுவதும் தமக்கே சொந்தம் என்கிறது சீனா; ஆனால் வியட்நாம், பிலிப்பைன்ஸ், புருனே, தைவான், மலேசியா நாடுகள் தங்களுக்கும் சொந்தமானது என உரிமை கொண்டாடி வருகின்றன.

சீனாவின் தென்பகுதியில், பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது இந்த தென் சீனா கடற்பரப்பு. உலகின் 3-ல் 1 பகுதி கப்பல் போக்குவரத்து இதன் வழியே நடைபெறுவதாலும், இப்பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் இருப்பதாலும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாகும்.
இதனிடையே சீனாவுக்கு எதிராக திஹேக் நகரில் உள்ள சர்வதேச தீர்ப்பாயத்தில் பிலிப்பைன்ஸ் நாடு 2013-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த சர்வதேச தீர்ப்பாயம், தென் சீனா கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா வரலாற்று உரிமைகள் கோருவதற்கு சட்டரீதியில் எந்த முகாந்திரமும் இல்லை என அதிரடியாக கூறியது.
சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இத்தீர்ப்பு. இத் தீர்ப்பை பிலிப்பைன்ஸ், ஜப்பான் நாடுகள் வரவேற்றன.
ஆனால் சீனாவோ இத்தீர்ப்பை ஏற்கவே முடியாது திட்டவட்டமாக கூறியுள்ளது. இது தொடர்பாக சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளதாவது:
- தென்சீனா கடல் தொடர்பான நடுவர் மன்றத்தின் தீர்ப்பு ஒரு அரசியல் கேலிக் கூத்து.
- இத்தீர்ப்பை சீனா ஏற்காது என்பது சட்டப்படி சர்வதேச சட்டங்கள் மற்றும் பிரதேசத்தின் விதிகளைப் பேணிக்காக்கும் செயல்தான்.
- தென்சீனா கடல் மீதான இறையாண்மை மற்றும் கடல் உரிமைகளானது இத்தீர்ப்பு முடிவால் பாதிக்கப்படாது.
- சர்வதேச அளவிலான பேச்சுவார்த்தை மூலம் சீனா தொடர்ந்து அமைதியான முறையில் தென் சீனக் கடல் சர்ச்சையைத் தீர்ப்பதுடன் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும்.
இவ்வாறு வாங் யீ கூறினார்.
இதனிடையே சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பை மீறும் வகையில் சர்ச்சைக்குரிய தென் சீனா கடற்பரப்பில் தாம் அமைத்துள்ள 2 விமான நிலையங்களில் சோதனைகளை நடத்திப் பார்த்துள்ளது சீனா. இது பற்றி கருத்து தெரிவித்த சீனா வெளியுறவுத்துறை துணை அமைச்சர் லியு ஜின்மின், தென்சீனா கடற்பரப்பில் விமானப்படை தளம் அமைக்க தங்களுக்கு முழு உரிமை உள்ளது என்றார்.
சீனாவின் இந்த அத்துமீறலால் தென்சீனா கடற்பரப்பில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications