நேபாளம் பிரதமர் ஒலிக்கு கூஜா தூக்கும் சீனா...உள்நாட்டு அரசியலில் மூக்கை நுழைக்கிறதா?
காத்மாண்டு: நேபாளம் பிரதமர் சர்மா ஒலிக்கு அந்த நாட்டில் ஆளும் நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரை பதவியில் இருந்து விலகுமாறு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால், அவரை சீனா காப்பாற்ற முயற்சித்து வருவதாகவும், நேபாளம் நாட்டின் உள்நாட்டு அரசியலில் சீனா தலையிடுவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
தன்னை பதவியில் இருந்து நீக்குவதற்கு இந்தியா முயற்சிக்கிறது என்று நேபாளம் பிரதமர் சர்மா ஒலி சமீபத்தில் தெரிவித்து இருந்தார். நேபாளத்தின் புதிய வரைபடத்தில் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்திற்குச் சொந்தமான காலாபானி, லிம்பியாதுரா மற்றும் லிபுலெக் கணவாய் பகுதிகளை இணைத்து நேபாளம் புதிய வரைபடத்தை வெளியிட்டது. இதற்கு இந்தியா தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தியாவின் எதிர்ப்புக்கு இடையே நேபாள நாடாளுமன்றத்தில் இந்த வரைபடம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு பின்னணியில் சீனா இருக்கிறது என்று இந்தியா ஆணித்தரமாக நம்பியது. கல்வான் பகுதியில் முகாமிட்ட சீனா மறுபக்கம் நேபாளத்தையும் தூண்டிவிட்டது. இதையடுத்து, தன்னை பிரதமர் பொறுப்பில் இருந்து அகற்றுவதற்கு இந்தியா முயற்சிக்கிறது என்று எந்தவித அடிப்படை ஆதாரங்கள் இன்றி ஒலி குற்றம்சாட்டினார்.
இதற்கு அவரது ஆளும் நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது. எந்தவித அரசியல் அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல், இந்தியாவின் மீது குற்றம்சாட்டுவதை திரும்பப் பெற வேண்டும் என்று ஆளும்கட்சியினர் நெருக்கடி கொடுத்ததுடன், பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஒலிக்கு அழுத்தம் கொடுத்தனர்.
இந்த நிலையில் அதிபர் பித்யா தேவி பண்டாரியை இரண்டு முறை சந்தித்து நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். அமைச்சரவையும் இதற்கு பரிந்துரை செய்து இருந்தது. அதிபரும் இதற்கு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்படாமல் இருந்து இருந்தால், கட்சி உடையும் பட்சத்தில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு ஒலி தள்ளப்பட்டு இருப்பார். ஆனால், அந்த சூழல் ஏற்படுவதற்கு முன்பு தன்னை பாதுகாத்துக் கொண்டார்.
இந்த நிலையில்தான் ஒலி தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள, சீனா அவருக்கு உதவுகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது. நேபாளத்திற்கான சீன தூதர் ஹவ் யாங்கி, சமீபத்தில் நேபாளம் அதிபர் பித்யா தேவி பண்டாரி மற்றும் மூத்த தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார். முன்னாள் பிரதமர்கள் மாதவ் நேபாள், ஜலா நாத் கண்டல் ஆகியோரையும் சந்தித்து சீன தூதர் பேசியுள்ளார். பிரதமர் ஒலி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மாதவ் நேபாள், ஜலா நாத் கண்டல் கோரி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி vs ஜிங்பிங்.. உலக அளவில் வெற்றி அடைந்த இந்தியாவின் மூவ்.. லடாக்கில் தோற்ற சீனாவின் தந்திரம்!
நேபாளம் கம்யூனிஸ்ட் நிலைக்குழு கமிட்டியின் 44 உறுப்பினர்களில் 30 உறுப்பினர்கள் ஒலி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தனர். இந்த நிலையில் அந்தக் கட்சியின் செயல் தலைவராக இருக்கும் புஷ்ப கமல் தஹல் எனப்படும் பிரசந்தாவை சீன தூதர் சந்தித்துள்ளார். இவர் ஒலிக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார். ஒலி ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கூறி விட்டால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையை நிலைக்குழு கமிட்டி எடுக்கலாம். இந்தக் கமிட்டியின் பெரும்பாலான உறுப்பினர்கள் பிரசந்தாவுக்கு ஆதரவு தெரிவித்து, ஒலிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நிலைக்குழு கமிட்டிக் கூட்டம் கடந்த சனிக்கிழமை நடப்பதாக இருந்தது. நேற்று ஒத்தி வைக்கப்பட்டு, மீண்டும் இன்று நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஒலிக்கு எதிரான முடிவு எடுக்கப்படுமா என்பது தெரிய வரும்.
இந்த நிலையில் ஒலிக்கு ஆதரவாக சீனா செயல்பட்டு அந்த நாட்டின் அரசியலில் மூக்கை நுழைத்து வருவது, இந்தியாவுக்கும் கவலை அளிப்பதாக இருக்கிறது. 68 வயதாகும் சர்மா ஒலி எப்படியாவது தனது பதவியை சீனா ஆதரவுடன் காப்பாற்றிக் கொள்ள முயற்சித்து வருகிறார். சீனாவும் பெரிய அளவில் முதலீட்டை குவித்து நேபாளத்தை தன் பக்கம் வைத்துக் கொள்ள முயற்சித்து வருகிறது.