ஒரு மனைவி, 4 கேர்ள் பிரண்ட்களுடன் ஒரே குடியிருப்பில்.. பல ஆண்டுகள் வசித்த சீன இளைஞர்! அம்மாடி
பெய்ஜிங்: நம்மில் பலரும் நான் அவனில்லை திரைப்படத்தைப் பார்த்து இருப்போம். அதில் ஜீவன் கதாபாத்திரம் பல பெண்களைக் காதலிப்பது போல நடித்து ஏமாற்றி இருப்பார். இப்படி கூட நடக்குமா என்றே அந்த படத்தைப் பார்க்கும் போது பலருக்கும் தோன்றி இருக்கும். ஆனால், அந்த படத்தையே தூக்கிச் சாப்பிடுவது போலச் சீனாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஒரே நேரத்தில் பலரை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றும் சம்பவங்கள் குறித்து நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், சீனாவைச் சேர்ந்த ஒருவர் அடுத்த கட்டத்திற்கே சென்றுவிட்டார்.

ஏமாற்றிய இளைஞர்: இந்த நபருக்குத் திருணமாகிவிட்ட நிலையில், மேலும் 5 பெண்களைக் காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றி இருக்கிறார். இதில் விஷயம் என்னவென்றால் அவர்கள் நான்கு பேரையும் இவர் ஒரே குடியிருப்பு வளாகத்தில் இருக்க வைத்துள்ளார். அதிலும் ஒரு காதலியைத் தனது மனைவி வசிக்கும் அதே கட்டிடத்தில் வசிக்க வைத்துள்ளார்.
அதுவும் ஏதோ ஓரிரு வாரங்கள் இல்லை.. சுமார் 4 ஆண்டுகளுக்கு மேல் இது தொடர்ந்துள்ளது. இத்தனை காலம் அவர்கள் 5 பேருக்கும் தங்கள் பாட்னர் ஏமாற்றுவது தெரியவில்லை. இது தொடர்பான தகவல் இணையத்தில் டிரெண்டாகும் நிலையில், அந்த நபர் எப்படி இதைச் செய்தார் என்பது குறித்து நெட்டிசன்கள் பெரும் விவாதமே நடத்தி வருகிறார்கள்.
யார் அவர்: ஜியோஜூன் என்ற நபர் வடகிழக்கு சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்தவர். அவர் சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர் என்றே தெரிகிறது. அவரது தாய் அங்கு நீச்சல் குளத்தில் வேலை செய்து வருகிறார். மேலும், அவரது தந்தை கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ஜியோஜூன் எப்படியாவது பணக்காரன் ஆக வேண்டும் எனத் துடித்துள்ளார்.
பணக்காரன் ஆக வேண்டும் என்றால் அவர் உழைத்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் தன்னை சுற்றி இருந்தோரை ஏமாற்ற முடிவு செய்து இருக்கிறார். தன்னை சுற்றி இருப்போரிடம் தான் பணக்கார குடும்பத்தின் வாரிசு என்று கூறிக்கொண்டு, போலியான ஒரு ஆடம்பர வாழ்க்கையை வாழத் தொடங்கினார்.
என்ன நடந்தது: இதே பொய்யைச் சொல்லியே அவர் முதலில் ஒரு பெண்ணை ஏமாற்றியுள்ளார். மேலும், போலியான ஆடம்பரப் பொருட்களை ஆன்லைனிலும் வாங்கி கொடுத்துள்ளார். இருவரும் காதலிக்கும் போதே அந்த பெண் கருவுற்றுள்ளார். ஜியோஜூன் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று நினைத்த அந்த பெண், அவரை திருமணமும் செய்து கொண்டுள்ளார். இருப்பினும், திருமணமான சில காலத்திலேயே தனது கணவர் பணக்காரன் இல்லை என்பதும் ஏமாற்றி தன்னை திருமணம் செய்ததும் அந்த பெண்ணுக்குத் தெரிய வந்தது.
இருப்பினும், கணவரை விவாகரத்து செய்யாமல் தனது குழந்தையைத் தனியாக வளர்க்க அந்த பெண் முடிவு செய்துள்ளார். அதேநேரம் அந்த பெண் தனது ஜியோஜூனை வீட்டில் இருந்து விரட்டிவிட்டாராம். இதனால் நடுத்தெருவுக்கு வந்த ஜியோஜூன், அடுத்து என்ன செய்யலாம் என யோசித்து இருக்கிறார். அப்போது தான் ஆன்லைன் கேம் ஒன்றில் ஜிங்ஓஹோங் என்ற பெண்ணை சந்தித்துள்ளார். அவரையும் ஏமாற்றிய ஜியோஜூன், அவரிடம் இருந்து 140,000 யுவானை (இந்திய மதிப்பில் ரூ. 16 லட்சம்) வாங்கி இருக்கிறார்.
இரண்டாவது குழந்தை: ஆனால், அத்தோடு ஜியோஜூன் தனது ஏமாற்று வேலையை நிறுத்தவில்லை. அவர் மேலும், 3 கல்லூரி பெண்களைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி இருக்கிறார். அதில் ஒரு பெண் கர்ப்பமடைந்து குழந்தையும் பெற்றெடுத்துள்ளார். அவரது போலியான ஆடம்பர வாழ்க்கை அந்த பெண்களும் உண்மை என நம்பிவிட்டனர். அவர்கள் 3 பேரிடம் இருந்தும் பணத்தை வாங்கி உல்லாசமாக வாழ்ந்து இருக்கிறார். இதில் விஷயம் என்னவென்றால், இவர்கள் 4 பேரும் ஒரே குடியிருப்பு வளாகத்தில் தான் வசித்து வந்துள்ளனர். அதுவும் 4 ஆண்டுகளாக..!
ஜியோஜூன் தனக்குக் கொடுத்த பையில் இருந்த கரன்சி நோட்டுகள் போலியானது என்பதை அந்த கல்லூரி பெண்களில் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அந்த பெண் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் தான் இவர் ஒரே நேரத்தில் பல பெண்களை ஏமாற்றியது தெரிய வந்தது. இது தொடர்பான செய்தியை உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள நிலையில், அதுவே இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications