கொரோனா தோற்றம்... வல்லுநர் குழுவின் முக்கிய ஆய்வு முடிவு... இன்னும் சில தினங்களில் வெளியீடு
பெய்ஜிங்: கொரோனா தோற்றம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளச் சீனா சென்றுள்ள வல்லுநர் குழுவின் முக்கிய ஆய்வு முடிவுகள் வரும் 10ஆம் தேதி வெளியிடப்படும் என்று அக்குழுவில் இடம்பெற்றுள்ள பீட்டர் தாஸ்ஸாக் என்ற ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு இதுவரை பல்வேறு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டிருந்தாலும், அதன் தோற்றம் இன்னும் மர்மமாகவே உள்ளது. இதனால் கொரோனா தோற்றம் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் வரும் காலங்களில் இதுபோல மீண்டும் ஒரு வைரஸ் பரவல் ஏற்படுவதைத் தவிர்க்கவும் ஆய்வுகளை மேற்கொள்ளப்படும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.
இதற்காக உலக சுகாதார அமைப்பின் விலங்கு நோய்கள் பிரிவின் உயர் நிபுணர் பீட்டர் பென் எம்பரேக் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன் சீனா சென்ற இந்தக் குழு, வூஹான் வைராலஜி மையம், விலங்கு சந்தை என பல முக்கிய இடங்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

ஆய்வு முடிவுகள்
இந்நிலையில், கொரோனாவின் தோற்றம் குறித்து இந்த ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்புகளை உள்ளடக்கிய அறிக்கை வரும் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் வெளியிடப்படலாம் என்று ஆய்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள அமெரிக்க ஆராய்ச்சியாளர் பீட்டர் தாஸ்ஸாக் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களில் நகரின் பல முக்கிய இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டதாகவும் இதன் மூலம் என்ன நடந்திருக்கலாம் என்பது பற்றிய முக்கிய தடயங்களைக் கண்டறிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சீன ஆய்வாளர்கள்
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "இந்த ஆய்வின் மூலம் என்ன நடந்திருக்கும் என்பது குறித்து ஓரளவு நாம் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் உயிரிழப்பு, பொருளாதார பாதிப்பு ஆகியவை வரும் காலங்களில் மீண்டும் ஏற்படுவதை நம்மால் தவிர்க்க முடியும். சீனா ஆராய்ச்சியாளர்களும் வைரஸ் தோற்றம் குறித்த ஆய்வுகளைக் கடந்த சில மாதங்களாகவே மேற்கொண்டு வருகின்றனர். அவர்களும் தங்கள் ஆய்வுப் பணிகள் குறித்த தகவல்களை எங்களுடன் பகிரந்துக்கொண்டனர்" என்றும் அவர் தெரிவித்தார்.

காட்டு விலங்கு சந்தை
வூஹான் நகரில் காட்டு விலங்குகளையும் கடல் விலங்குகளையும் உயிருடன் விற்பனை செய்யும் சந்தை அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் இங்கிருந்தே மனிதர்களுக்குப் பரவியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இந்த சந்தையில் மேற்கொண்ட ஆய்வு குறித்துப் பேசிய அவர், "வூஹான் சந்தையில் மேற்கொண்ட ஆய்வு மிகவும் முக்கியமானதாக இருந்தது. கொரோனா பரவலுக்குப் பின் அச்சத்தால் அங்கிருந்த கடை உரிமையாளர்கள் அவசர அவசரமாக வெளியேறினர். அவர்களின் உபகரணங்களை விட்டுச் சென்றார்கள். அதில் பல ஆதாரங்கள் இருந்தன" என்றார்.

ஆய்வுப் பணிகள் நிறைவு
சீன பயணத்தின் இறுதியில் பல முக்கிய விஷயங்களைக் கண்டுபிடிக்க முடிந்ததாகவும் இதன் மூலம் கொரோனா தோற்றம் குறித்துத் தெளிவான ஒரு பார்வை கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், ஆய்வின் இறுதி முடிவுகள் குறித்துக் கூடுதல் தகவல்களைப் பகிர அவர் மறுத்துவிட்டார். இந்தக் குழு தற்போது சீனாவில் தங்கள் ஆய்வு பணிகளை முடித்து விட்டனர். தற்போது ரிப்போர்ட்டை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்தக் குழு, வரும் பிப்ரவரி 10ஆம் தேதி சீனாவிலிருந்து புறப்படவுள்ளனர்.












Click it and Unblock the Notifications