சீனாவின் “டுவிஸ்ட்”.. எங்கள் நாட்டிலும் மர்ம பொருள் பறக்குது! பூதாகரமாக வெடித்த உளவு பலூன் சர்ச்சை
தங்கள் நாட்டின் வான் பரப்பிலும் மர்ம பொருள் பறந்ததாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன.
பெய்ஜிங்: அமெரிக்காவின் வான் எல்லைக்குள் புகுந்ததற்காக அடுத்தடுத்து சுட்டு வீழ்த்தப்பட்ட 4 உளவு பலூன்கள் சீனாவை சேர்ந்தவை என்று உலக நாடுகள் குற்றம்சாட்டி இருக்கும் நிலையில், தங்கள் நாட்டின் வான் பரப்பிலும் மர்ம பொருள் பறந்ததை பலர் கண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன.
அமெரிக்காவின் வான் எல்லைக்குள் சீனாவின் உளவு பலூன்கள் புகுந்ததாக அந்நாட்டு அரசு ஊடகங்களும் வெளியிட்ட செய்தி சர்வதேச அளவில் கடந்த வாரம் முழுவதும் பரபரப்பை பற்ற வைத்தது.
அந்த பலூன்கள் கனடா, இந்தியா ஆகிய நாடுகளின் வான் எல்லைக்கு உள்ளேயும் அத்துமீறி சென்று உளவு பார்த்ததாக செய்திகள் வெளியாகின. இந்த செயலுக்கு சீனாவே காரணம் என்று கூறி பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

உளவு பலூன்கள்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவை கண்காணிக்க அதன் வான் எல்லைக்குள் சீனாவின் உளவு பலூன்கள் அனுப்பப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அந்த பலூன்களை பார்த்த அமெரிக்க விமானப் படை அதை சுட்டு வீழ்த்தியது. சீனாவால் இயக்கப்பட்டதாக கூறப்படும் அந்த பலூன்களை தற்போது ஏலியன்கள் இயக்கி இருக்கலாம் என அமெரிக்க விமானப்படை அதிகாரி தெரிவித்தார்.

வேற்று கிரக வாசியா?
கடந்த பல ஆண்டுகளாக வேற்று கிரக வாசிகள் பற்றியும், ஏலியன்களின் வாழ்வியல் குறித்தும் பல்வேறு கற்பனை சினிமாக்கள் வெளியாகி வருகின்றன. பூமிக்கு வெளியே வேற்று கிரகங்களில் ஏலியன்கள் வசிக்கின்றனவா என்ற ஆய்வை நாசா உள்ளிட்ட பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள் மேற்கொண்டு வருகின்றன.

4 வது உளவு பலூன்
ஏலியன்கள் பூமிக்குள் படையெடுத்து வந்து ஆக்கிரமிக்கப்போவதாக கட்டுக் கதைகளும் உள்ளன. இந்த நிலையில் அமெரிக்க விமானப் படையின் கமாண்டர், உளவு பலூன்களின் வருகையை சுட்டிக்காட்டி பூமிக்கு வேற்று கிரக வாசிகள் வருகையாகக் கூட இது இருக்கலாம் என்ற பகீர் தகவலை கூறி இருக்கிறார். இந்த நிலையில் அமெரிக்க போர் விமானங்களால் சீனாவின் 4 வது உளவு பலூன்கள் இன்று சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது.

கனடா பிரதமர்
அதேபோல் கனடாவின் வான்வெளியில் பறந்த மர்ம பொருள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறி உள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தான் பேசியதாகவும் அவர் கூறி இருக்கிறார். தொடர்ந்து இருநாட்டு வான்வெளியிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

சீனாவில் மர்ம பொருள்
இந்த நிலையில் சீனாவின் கிங்டாவ் பகுதியில் உள்ள நீர்நிலைகள் அருகே மர்ம பொருட்கள் பறந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து இருக்கின்றன. அந்நாட்டு கிங்டாவ் ஜிமோ மாவட்டத்தின் கடல் மேம்பாட்டு ஆணையத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் இதுகுறித்து தெரிவித்து உள்ளார். அப்பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் இதை பார்த்ததாக கூறியதாக அந்த ஊழியர் தெரிவித்துள்ளார்.

டுவிஸ்ட்
இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் விளக்கி இருக்கிறார்கள். அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் இதை சீனா அனுப்பிய உளவு பலூன் என்று கூறி வரும் நிலையில் சீனாவின் வான் வெளியிலும் மர்ம பொருள் பறந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டு இருக்கும் செய்தி இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக அமைந்து உள்ளது.












Click it and Unblock the Notifications