சீனா- பாகிஸ்தான் நல்லுறவு.. இம்ரானை விட ஷெபாஸ் தலைமையில் சிறப்பாக இருக்கும்.. சீனா விருப்பம்
பெய்ஜிங்: சீனா- பாகிஸ்தான் இடையே எப்போதும் நல்லுறவு நீடிக்க பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கானைவிட ஷெபாஸ் ஷெரீப் இருந்தால் சிறப்பாக இருக்கும் என சீன அரசின் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் இம்ரான் கானுக்கான ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றன. இதையடுத்து இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு நடத்தவிருந்தது.
ஆனால் வாக்கெடுப்பு நடத்தாமல் இருக்க இம்ரான் கான் பல முயற்சிகளில் ஈடுபட்டார். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுடன் வாக்கெடுப்பு நேற்று நள்ளிரவு நடத்தப்பட்டது.

174 எம்பிக்களால் கவிழ்ந்த இம்ரான் அரசு
இதில் இம்ரான் கான் அரசு தப்பிக்க 172 எம்பிக்களின் ஆதரவு தேவைப்பட்டது. ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 174 எம்பிக்கள் ஆதரவு அளித்தனர். இதையடுத்து இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. தனது ஆட்சியை கவிழ்க்க வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி வந்த நிலையில் அவர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

புதிய பிரதமர் யார்
இந்த நிலையில் புதிய பிரதமர் யார் என்பது குறித்து இன்றைய தினம் தேர்வு செய்யப்படுகிறது. இதில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் நடைபெறும் அரசியல் திருப்பங்கள் குறித்து சீனா உற்று நோக்கி வருகிறது.

சீன நாளேடு
இம்ரான் கான் வெளியேறியது முதல் புதிய பிரதமர் யார் என்பது வரை சீன அரசின் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் சீனா- பாகிஸ்தான் இடையே உள்ள நல்லுறவு பாகிஸ்தானில் ஏற்படும் அரசியல் மாற்றத்தால் பாதிக்கப்படாது. ஏனென்றால் இரு தரப்பு நல்லுறவை பாதுகாப்பதும் அதிகரிப்பதுமே அந்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்தாகும்.

நவாஸ் ஷெரீப்
இம்ரான் கானுக்கு பதிலாக புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்கிறார் என்பதை நாங்கள் அறிகிறோம். நவாஸ் ஷெரீப்பின் சகோதரர். நவாஸ் பிரதமராக இருக்கும் போது பாகிஸ்தான்- சீனா இடையே நீண்ட காலமாக நல்லுறவை பேணிக் காத்தவர். அவருடைய குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பிரதமராகும் போது நிச்சயம் இரு நாடுகளுக்கு இடையே உள்ள நல்லுறவை காக்க ஒத்துழைப்பு நல்குவார்.

இம்ரானை விட சிறந்தவர் ஷெபாஸ்
இன்னும் சொல்ல போனால் இம்ரான் கான் சீனாவுடனான நல்லுறவை வளர்ப்பதில் ஒத்துழைப்பு நல்கியதை காட்டிலும் ஷெபாஸ் ஷெரீப் வழங்குவார். ஷெபாஸ் ஷெரீப்பின் கட்சியை போன்ற பாரம்பரிய அரசியல் கட்சியின் தலைமையில் பாகிஸ்தான் இயங்கும்போது நிச்சயம் அண்டை நாடுகளுடன் நல்லுறவு சிறப்பாகவே இருக்கும் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications