ரஷ்ய போருக்கு இடையில் திடீர் ட்விஸ்ட்.. இந்தியாவிற்கு வெள்ளை "டிராகனை" தூது அனுப்பிய சீனா.. கவனம்!
பெய்ஜிங்: உக்ரைன் போரில் இந்தியாவும் சீனாவும் கிட்டத்தட்ட ஒரே அணியில் இருக்கும் நிலையில் இந்தியா குறித்து சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் அளித்த பேட்டி ஒன்று அதிக கவனம் ஈர்த்துள்ளது.
உக்ரைன் போரை தொடர்ந்து ரஷ்யாவிற்கு எதிராக மேற்கு உலக நாடுகள் எல்லாம் ஒன்று திரண்டு உள்ளன. ஐநா பாதுகாப்பு கவுன்சில், மனித உரிமைகள் ஆணையம், ஐநா பொதுச்சபை என்று பல மேடைகளில் ரஷ்யாவிற்கு எதிராக தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஆனால் ரஷ்யாவிற்கு எதிரான எந்த தீர்மானத்தையும் இந்தியா இதுவரை ஆதரிக்கவில்லை. இதுவரை 5 தீர்மானங்களில் ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்க மறுத்து இந்தியா வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளது.

வாக்கெடுப்பு
ரஷ்யாவை இந்தியா நேரடியாக ஆதரிக்கவில்லை என்றாலும் ரஷ்ய எதிர்ப்பு நிலைப்பாட்டை இந்தியா எடுக்க மறுத்துவிட்டது. அதோடு இரண்டு நாடுகளுக்கும் இடையில் சமரசம் பேச தயார் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த போரில் சீனாவும் இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஆனால் சீனா இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக ரஷ்யா ஆதரவை எடுத்துள்ளது. சீனா - ரஷ்யா இடையே மிக நெருக்கமான நட்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

எல்லை பிரச்சனை
எல்லை பிரச்சனை காலம் காலமாக இருக்கிறது. அதற்காக இரண்டு நாடுகளும் மோதிக்கொள்ள கூடாது. எல்லா விஷயங்களையும் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே சமாளிக்க வேண்டும். தொடர்ந்து நேர்மையான, நடுநிலையான பேச்சுக்களை நாம் நடத்த வேண்டும். பிரச்சனைகளுக்கு நாம் அப்படித்தான் தீர்வு காண வேண்டும். நாம் இருவரும் பார்ட்னர்களாக இருக்க வேண்டும்.

வெளி விஷயங்கள்
மாறாக நாம் மோதிக்கொண்டு இருக்க கூடாது. வெளி விஷயங்கள் நம்முடைய இரண்டு நாட்டு உறவில் தலையிட கூடாது. அந்நிய சக்திகள் இரண்டு நாட்டு உறவை பாதிக்க கூடாது. சர்வதேச அரங்கில் நாம் ஒற்றுமையாக இருப்பது மிக முக்கியம் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இத்தனை நாள் லடாக் விவகாரம் தொடங்கி ஐநா பாதுகாப்பு கவுன்சில் வரை பல மேடைகளில் இந்தியாவை கடுமையாக எதிர்த்த சீனா இப்போது சமாதான டிராகனை தூது அனுப்பி உள்ளது.

முக்கியமான நேரம்
சரியாக ரஷ்ய போர் நடக்கும் சமயத்தில் சீனா இந்தியாவை கூட்டு சேர்த்துள்ளது. ரஷ்யாவிற்கு நேரடி ஆதரவு தெரிவித்த காரணத்தால் மேற்கு உலகமே சீனாவை எதிர்த்து வருகிறது. சீனாவிற்கு ரஷ்யாவை தவிர வேறு பெரிய நட்பு நாடுகள் இல்லை என்ற நிலை இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியாவை சட்டென சீனா ஆதரித்து நட்பாக பேசுகிறது. சர்வதேச அளவில் சீனா - ரஷ்யா - இந்தியா என்ற கூட்டமைப்பை உருவாக்கும் பிளான் இதுவோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்கா - குவாட்
அதிலும் சீனா அந்நிய சக்திகள் என்று கூறி இருப்பது.. அமெரிக்காவை பற்றியோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற குவாட் அமைப்புகளை சுட்டிக்காட்டி இந்தியாவை தங்கள் பக்கம் சீனா இழுக்க முயல்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஷ்யா விவகாரத்தில் இந்தியா - சீனா, ஏன் பாகிஸ்தானும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதை பயன்படுத்தி சீனா இந்தியாவிடம் நெருங்கும் திட்டம் போடுகிறதோ என்ற விவாதத்தை இந்த பேட்டி எழுப்பி உள்ளனர்.

கவனமாக இருக்க வேண்டும்
அதே சமயம் வெளியுறவுத்துறை வல்லுனர்கள் சீனாவுடன் கவனம் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். சீனா திடீரென பார்ட்னர் ஆகலாம் என்று கூறுகிறது. இது கண்டிப்பாக நல்ல விஷயம் என்று ஒதுக்கிவிட முடியாது. இதற்கு பின் வேறு திட்டங்கள் இருக்கலாம். இதை இந்திய வெளியுறவுத்துறை மிகவும் கவனமாகவே அணுக வேண்டும். அவசரபட கூடாது என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications