இந்த அக்கப்போர் பண்றாரே.. வர்த்தக போர் எப்போது முடியும்? கட் அண்ட் ரைட்டாக பேசிய சீனா
பெய்ஜிங்: சீனா மீதான அமெரிக்காவின் வரி சர்வதேச அளவில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. நிலைமையை சரி செய்ய பேச்சுவார்த்தையை தொடங்க டிரம்ப் முன்வந்திருக்கிறார். ஆனால் வரியை குறைத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை என சீனா கறாராக கூறியிருக்கிறது.
இரு நாடுகளும் சமாதானமாக போனால்தான் சர்வதேச அளவில் வர்த்தகம் இயல்பாக நடைபெறும். எனவே இந்த பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்காவுக்கு இருக்கிறது.

உலக உற்பத்தியில் சீனா 28.7% பங்கு வகிக்கிறது. அமெரிக்காவின் பங்கு வெறும் 16.5% தான். இப்படி இருக்கும்போது சீனாவுக்கு 245% வரை வரி விதித்திருப்பதன் மூலம் உலகம் முழுவதும் இந்த வரி பாதிப்பு எதிரொலித்திருக்கிறது. பெரும்பாலான பொருட்கள் சீனாவில்தான் உற்பத்தி செய்யப்படுவதால் அந்த பொருட்களின் விலை அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் விண்ணை தொட்டிருக்கின்றன. விலை உயர்வு சாமானிய மக்களை கடுமையாக பாதித்திருக்கிறது.
மூன்றாம் நாடுகளில் அதிக இறக்குமதி செலவுகள், சிறிய தொழில்கள் மூடல், வேலைவாய்ப்பு குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கின்றன. விஷயத்தை சமாளிக்க மிகப்பெரிய நிறுவனங்கள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதாவது ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி மையத்தை சீனாவிலிருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு மாற்ற முயன்றன. இந்த முயற்சியும் தோல்வியில்தான் முடிந்தன.
காரணம் சீனாவில் ஒருங்கிணைந்த தயாரிப்பு திறன் இருக்கிறது. உதாரணத்திற்கு ஆப்பிள் போன்கள் உற்பத்தியை எடுத்துக்கொள்வோம். இது கொஞ்சம் சிக்கலான செயல்முறை. போனை தயாரிக்க உயர் தொழில்நுட்பமும், அதை பயன்படுத்த தெரிந்த நிபுணர்களும் தேவை. இதை செய்ய அமெரிக்காவில் கூட போதுமான அளவுக்கு ஆட்கள் இது கிடையாது. எனவேதான் சீனாவில் ஐபோன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் என்பது ஓர் உதாரணம்தான். இப்படி நிறைய பொருட்கள் இருக்கின்றன.
எனவேதான் இந்த பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையை சீனாவிலிருந்து மாற்ற முடியாமல் தவிக்கின்றன. மீறி மாற்றினாலும் புதிய தொழிற்சாலைகளால் எதிர்பார்த்த அளவுக்கு உற்பத்தியை கொடுக்க முடியவில்லை. இவை அனைத்தும் நுகர்வோரை பாதித்தது. நேற்றுவரை 100 டாலருக்கு விற்று வந்த ஐபோன், வரி காரணமாக 245 டாலர் விலை உயர்ந்திருக்கிறது. சோலார் பேனல், எலக்ட்ரானிக் பொருட்கள் என அனைத்தும் விலை உயர்ந்திருக்கிறது.
இதே நிலைமை நீடித்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும். எனவே நிலைமையை சமாளிக்க சீனாவுடன் சமாதானமாக போக வேண்டிய சூழல் எழுந்திருக்கிறது. இதுபற்றி சமீபத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப், சீனாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று கூறியிருந்தார். ஆனால் சீனா இதனை மறுத்திருக்கிறது. சீன வெளியுறவுத்துறை, "வரி விதிப்பு பற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. பூனைக்கு மணியை கட்டியவர்கள்தான் அதை அவிழ்க்க வேண்டும்" என்று கூறியுள்ளது.
பேச்சுவார்த்தை நடக்க வேண்டும் எனில் முதலில் வரியை குறைக்க வேண்டும். அதற்கு பின்னர்தான் பேச்சுவார்த்தையே தொடங்கும் என்று கூறியிருக்கிறது. டிரம்ப் உண்மையில் பேச்சுவார்த்தையை தொடங்குவாரா? என்பது தெரியாது. ஏனெினல், அமெரிக்காவின் பிரபல விமானம் தயாரிப்பு நிறுவனமான போயிங் சீனாவுக்கு விமானங்களை தயாரித்து கொடுக்க ஒப்பந்தத்தை போட்டிருந்தது. வரி காரணமாக போயிங் தயாரித்து கொடுத்த விமானத்தை சீனா வாங்கவில்லை. அமெரிக்காவுக்கே திருப்பி அனுப்பியது.
இதை டிரம்ப் ரசிக்கவில்லை. சீனா மீது கேஸ் போட சொல்லி போயிங் நிறுவனத்தை உசுப்பேற்றி கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் இவரா வரியை குறைக்க சீனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்று கேள்வி எழுந்திருக்கிறது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? டிரம்ப் வழிக்கு வருவாரா?












Click it and Unblock the Notifications