தென்சீனா கடல் விவகாரத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம்... ஒபாமாவுக்கு சீனா 'வார்னிங்'
பீஜிங்: தென்சீனா கடல் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என்று அந்நாட்டு அதிபர் ஒபாமாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் தென்பகுதியில் உள்ள தென்சீனா கடற்பரப்பு இயற்கை எரிவாயு வளம் கொண்டது. இந்த கடற்பரப்பு முழுவதையும் தமக்கு சொந்தம் கொண்டாடி வருகிறது சீனா.
ஆனால் தென் சீனா கடற்பரப்பில் தங்களுக்கும் உரிமை உண்டு என்பது வியட்நாம், பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா நாடுகளின் நிலைப்பாடு. இதை இந்தியா, அமெரிக்காவும் ஆதரித்து வருகிறது.

இதனிடையே தென்சீனா கடற்பரப்பில் 2 செயற்கை தீவுகளை உருவாக்கி அங்கு போர் விமானங்களை நிறுத்துவதற்கான ஓடுபாதையையும் சீனா உருவாக்கியது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அண்மையில் அமெரிக்காவின் பிரமாண்ட போர்க்கப்பல் ஒன்றும் போர் விமானங்களும் சீனாவின் இந்த செயற்கை தீவுகள் அருகே முகாமிட்டன.
இதற்கு சீனா கடும் எதிர்ப்பும் எச்சரிக்கையும் விடுத்து வந்தது. இந்நிலையில் ஆசிய- பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிக்னோ அகினோவை அமெரிக்கா அதிபர் ஒபாமா சந்தித்து பேசினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர், சீனாவின் புதிய கட்டுமானங்கள் அந்த பிராந்தியத்தின் நிலைத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இத்தகைய பதற்றத்தை தணிக்க புதிய கட்டுமானங்கள், ராணுவமயமாக்கலை குறைக்க வேண்டும் என்றும் ஒபாமா கூறினார்.
அதாவது தென்சீனா கடற்பரப்பில் சீனா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை குறிப்பிட்டு இக்கருத்துகளை ஒபாமா தெரிவித்திருந்தார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவுதுறை செய்தித் தொடர்பாளர் ஹாங்லி கூறி இருப்பதாவது:
தென்சீனா கடல் பகுதி பிரச்சினையில் தேவையில்லாமல் ஒபாமா தலையிட வேண்டாம். இந்த விவகாரத்தில் விளையாடுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அமெரிக்காவின் தலையீட்டால் தென்சீனா கடல் பகுதி நாடுகள் மத்தியில் பதற்றம் உருவாக்கப்படுகிறது. இது தொடரக்கூடாது.
இவ்வாறு ஹாங்லி எச்சரித்துள்ளார்..












Click it and Unblock the Notifications