அமெரிக்காவுக்கு பதிலடியாக சீனா எடுத்த நடவடிக்கை.. இந்தியாவுக்கு சிக்கல்! முடங்கும் ஆட்டோமொபைல் துறை
டெல்லி: அரிய மண் காந்தங்களை சீனா ஏற்றுமதி செய்ய புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இதனால் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களால் இதனை பெற முடியவில்லை. இதே நிலைமை நீடித்தால் ஜூன் முதல் வாரத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறை முற்றிலுமாக முடங்கிவிடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சீனாவுக்கு அமெரிக்க விதித்த வரி காரணமாக உலக அளவில் வரி போர் நடந்தது. தற்போது இந்த போர் முடிவுக்கு வந்திருந்தாலும், உற்பத்தியில் மந்த நிலை தொடர்கிறது. இந்நிலையில் இந்தியாவும் இந்த சிக்கலில் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) கூறியிருக்கிறது.

இந்திய ஆட்டோமொபைல் துறைகள் அரிய மண் காந்தங்களை சார்ந்து இருக்கின்றன. இதன் விநியோகத்தில் 90%க்கும் அதிகமாக சீனாதான் வைத்திருக்கிறது. இந்நிலையில். அமெரிக்க வரிக்கு பதிலடி கொடுக்க, இந்த காந்தங்களை ஏற்றுமதி செய்ய சீனா கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்த கட்டுப்பாடுகள்படி ஏற்றுமதி செய்தால் போதுமான அளவுக்கு காந்தங்கள் கிடைக்காது. எனவே, இந்திய ஆட்டோமொபைல் துறை தனது உற்பத்தியை அநேகமாக ஜூன் தொடக்கத்தில் நிறுத்தி விடும் என்று SIAM கூறியிருக்கிறது.
இப்போது கையிருப்பில் இருக்கும் காந்தங்கள் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே வரும் என்றும், உடனடியாக பிரதமர் இதில் தலையீடு செய்யவில்லை எனில், முழு துறையும் முடங்கும் அபாயம் ஏற்படும் என்றும் கூறியிருக்கிறது. கடந்த ஏப்.4ம் தேதி முதல் இந்த கட்டுப்பாடுகளை சீனா வைத்திருக்கிறது. அன்று தொடங்கி இன்று வரை சுத்தமாக 1 சதவிகிதம் கூட காந்தங்கள் இந்தியாவுக்கு வரவில்லை என்று சொல்லப்படுகிறது.
கடந்த மே.19ம் தேதி SIAM சார்பில் இது குறித்த விவாதிக்க கூட்டம் ஒன்று போடப்பட்டிருந்தது. அதில் மாருதி சுசுகி, மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் என பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இதில் பங்கேற்றிருந்தன. கூட்டத்தின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியிருந்தது. அதில், "அரிய மண் காந்தம் பற்றாக்குறையால் மே மாத இறுதியில் அல்லது ஜூன் தொடக்கத்தில், ஆட்டோமொபைல் துறை உற்பத்தி முடங்கும் நிலை உள்ளது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
சமீப காலமாக இந்தியாவுக்கும்-சீனாவுக்கும் இடையே சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ராஜ்ஜிய உறவுகள் அவ்வளவு நன்றாக இல்லை. முற்றிலுமாக முட்டல் மோதல் என்று சொல்ல முடியாது. ஆனால், சீனாவுடன் ஒத்துழைக்க இந்தியா ரெடியாக இல்லை. இப்படி இருக்கையில் சீனாவிடம் பேசி உடனடியாக இந்த அரிய மண் காந்தங்களை எப்படி பெறப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.
இந்த விவகாரம் குறித்து இந்தியாவில் உள்ள சீன தூதரக அதிகாரிகளிடம் ராய்ட்டர்ஸ் சில கேள்விகளை எழுப்பியிருந்தது. அதற்கு, "இரு நாடுகளுக்கும் இணக்கமான வர்த்தகத்தை தீவிரமாக நெறிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு வருகிறது" என பதில் கிடைத்திருக்கிறது. இப்போ என்ன காந்தம் தருவியா? தர மாட்டியா? என்கிற கேள்விக்கு சீனா உறுதியான பதிலை சொல்லாமல் மழுப்பி வருகிறது.
கடந்த நிதியாண்டில் சுமார் 450 டன் அளவுக்கு அரிய காந்தங்களை இந்தியா இறக்குமதி செய்திருந்தது. இந்த ஆண்டு 700 டன்களாக இதன் தேவை இருக்கிறது. டிமாண்ட் இந்த அளவுக்கு இருக்கும் நிலையில் சீனா தனது வேலையை காட்ட தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications