'இமேஜ் பில்டப்புக்கு' எல்லை விவகாரங்களில் தந்திரங்களை கையாளும் மோடி: சீனா அரசு நாளேடு தாக்கு
பெய்ஜிங்: இந்தியாவில் தமது கவுரவத்தை நிலைநாட்டுவதற்காக எல்லை விவகாரங்களில் சில தந்திரங்களை பிரதமர் மோடி கையாளுவதாக சீனாவின் அரசு நாளேடான தி குளோபல் டைம்ஸ் சாடியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நாளை முதல் 3 நாட்கள் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பிரதமராக பதவியேற்ற பின்னர் சீனாவுக்கு முதல் முறையாக மோடி பயணம் மேற்கொள்கிறார்.

இந்த நிலையில் சீனாவின் அதிகாரப்பூர்வ அரசு நாளேடான குளோபல் டைம்ஸில் மோடியை விமர்சித்து ஒரு கட்டுரையை நேற்று வெளியாகியுள்ளது. ஷாங்காய் சமூக அறிவியல் அகாடமியைச் சேர்ந்த ஆய்வாளர் ஹியூ ஜியோங், "மோடியின் வருகையினால் சீன-இந்திய உறவுகள் மேம்படுமா? என்ற தலைப்பில் அந்த கட்டுரையை எழுதியுள்ளார்.
அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
மோடி பிரதமர் பதவி ஏற்ற நாள் முதல் இந்தியாவின் உறவுகளை ஜப்பான், அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் பேணி வளர்ப்பதில் பாடுபட்டு வருகிறார். இந்தியாவின் மோசமான உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார நிலைமைகளை சீர் செய்ய அவர் முனைகிறார்.
கடந்த ஆண்டு இவரது அயல்நாட்டுக் கொள்கைகள், மோடி ஒரு நடைமுறைவாதி என்பதையே எடுத்துக் காட்டியது, அவர் எதிர்காலம் குறித்து சிந்திப்பவராக அல்ல.
இந்திய-சீன தலைவர்கள், அரசியல் நம்பகத்தன்மையை வளர்த்தெடுப்பதோடு மட்டுமல்லாமல், ஒப்புக் கொள்ளப்பட்ட கொள்கைகளைத் தக்கவைப்பதிலும் வெறும் பேச்சாக மட்டுமே அல்லாமல் செயலிலும் தங்கள் நோக்கங்களை வெளிப்படுத்துவது அவசியம்.
இந்த விவகாரத்தில் மோடி, சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிக்கு வருகை தரக்கூடாது , அது அவரது அரசியல் ஆதாயத்துக்கு வழிவகுக்கும். மேலும் இருதரப்பு உறவுகளில் தலையீடு செய்யும் எந்த வித அறிவிப்பையும் மோடி வெளியிடக்கூடாது.
இந்திய அரசு தலாய் லாமாவுக்கு அளிக்கும் ஆதரவை முழுதும் நிறுத்த வேண்டும், இந்திய-சீன உறவுகளில் திபெத் பிரச்சினை ஒரு தடைக்கல்லாக இல்லாத வகையில் இந்திய அரசு செயல்படுவது அவசியம்.
சீனாவுடன் போட்டியிடுவதற்காக மற்ற அண்டை நாடுகளுடன் மோடி உறவுகளைப் பலப்படுத்துகிறார். அதே வேளையில் சீனா உருவாக்கிய பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்.
எல்லைப் பிரச்சினைகளிலும், பாதுகாப்பு விவகாரங்களில் சிறு தந்திரங்களைக் கடைபிடித்து தனது உள்நாட்டு கவுவரவத்தை நிலைப்படுத்த எண்ணுவதோடு, சீனாவுடனான உறவுகளின் பயன்கள் மீதும் கவனம் செலுத்த நினைக்கிறார்.
இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே பிரதமரின் சீனா பயணம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர், பிரதமர் மோடி சீனா, மங்கோலியா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு 6 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது எண்ணற்ற ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
இருப்பினும் இந்தியா-சீனா இடையேயான எல்லை விவகாரத்துக்கு தீர்வு காண நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. எல்லை பிரச்சனை குறித்து 18 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் தீர்வு எட்டப்படவில்லை என்றார்.
மங்கோலியாவில்..
சீனா பயணத்தை முடித்துக் கொண்டு மங்கோலியா செல்லும் பிரதமர் மோடி, இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய அளவிலான நிதி உதவியை அறிவிக்க இருக்கிறார். அதாவது இந்தியாவை சுற்றிய அண்டை நாடுகளை சீனா தம்வசம் எப்படி ஈர்க்கிறதோ அதே பாணியில் சீனாவை சுற்றிய அண்டைநாடுகளுக்கு நிதி உதவிகளை அள்ளி தம் வசம் இழுக்கும் இந்தியாவின் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
இதனால் பிரதமர் மோடியின் மங்கோலிய பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications