புலியை அடித்துச் சாப்பிட்ட சீனத்து "புலிப்பாண்டி" கைது... 13 வருடம் சிறைத் தண்டனை
பெய்ஜிங்: தனது பண பலத்தைக் காட்ட புலியைக் கொன்று அதன் கறியை நண்பர்களுக்கு விருந்தளித்த சீன வியாபாரிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சீனாவை சேர்ந்த வியாபாரி ஸு. பெரும் பணக்காரரான இவர் தனது நண்பர்களுக்கு அவ்வப்போது விருந்தளித்துள்ளார். அப்போது தனது பணபலத்தைக் காட்ட புலிக்கறியை உணவாக பரிமாறியுள்ளார். மேலும், தனது ஆண்மையைப் பெருக்க புலியின் ரத்தத்தை ஸூ மதுவாக குடித்து மகிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2013ம் ஆண்டு மட்டும் ஸு 3 புலிகளை கொன்று சமைத்துச் சாப்பிட்டுள்ளார். இதற்கென சமூகவிரோத கும்பல் ஒன்றிடம் இருந்து சட்டவிரோதமாக திருடப்பட்ட புலிகளைப் பெற்றுள்ளார் ஸு.

புலி ஒன்றை மின்சாரம் பாய்ச்சிக் கொன்ற ஸு அதன் இறைச்சியை வெட்டிக் கூறு போடும் வீடியோ ஒன்று போலீசாரிடம் கிடைத்தது. அதன் அடிப்படையில் கைது செய்த போலீசார், இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் தனது குற்றத்தை ஸு ஒப்புக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஸு உள்பட 15 பேர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு ஸுக்கு 13 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மேலும், அவருக்கு ரூ.15 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இவருக்கு உடந்தையாக இருந்த 14 பேருக்கு ஐந்து முதல் ஆறரை ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஸு வீட்டில் போலீஸார் சோதனையிட்டபோது புலிக் கறி மட்டுமல்லாமல் ராஜநாகம் உள்ளிட்ட பல அரிய விலங்குகளையும் கூட அவர் சாப்பிட்டு வந்தது தெரிய வந்ததாம்.
புலிக்கறி சாப்பிடுவது என்பது உலக அளவில் மிகவும் அரியதாக பார்க்கப்படுகிறது. மேலும் புலிக்கறி கிடைப்பதும் குதிரைக் கொம்பானதாகும். அதிக செலவு பிடி்க்கும் விஷயமும் கூட. ஆனாலும் தனது பண பலத்தால் புலிக்கறியையும் சாப்பிட்டு விருந்தும் வைத்துள்ளார் இந்த ஸு. சீனாவில் சில பெரும் பணக்காரர்கள் புலிக்கறி சாப்பிடுவதாக ஏற்கனவே புகார்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் மொத்தமே 3200 புலிகள்தான் இருப்பதாக உலக வைல்ட்லைப் நிதியம் கணக்கு கூறுகிறது. இவற்றில் பெரும்பாலானவை இந்தியாவில்தான் உள்ளன. இதுதவிர தாய்லாந்து, வட கிழக்கு சீனாவிலும் புலிகள் கணிசமாக உள்ளன. கடந்த நூற்றாண்டில் 97 சதவீதம் புலிகள், வேட்டை காரணமாக கொல்லப்பட்டு விட்டன. மேலும் வசிப்பிட இழப்பு காரணமாகவும் பல புலிகள் இடம் பெயர்ந்து உயிரிழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications