டி.வி நிகழ்ச்சியில் பங்கேற்க 4 மாதக் குழந்தையை விற்ற தந்தைக்கு 5 ஆண்டுச் சிறை
பீஜிங்: சீனாவில் டி.வி. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடகராகும் ஆசையில் தனது 4 மாத குழந்தையை விற்ற தந்தைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் குய்சோவ் மாகாணத்தை சேர்ந்தவர் சொவ். பாடுவதில் ஆர்வம் மிக்க இவருக்கு 4 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், அவரது மனைவி தனது குழந்தையை காணவில்லை என்றும் அதனை கண்டுபிடித்து தருமாறும் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
அவரது புகார் தொடர்பாக போலீசார் நடத்திய விசாராணையில் அவரது கணவரான சொவ், தனது குழந்தையை விற்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சொவ் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், டி.வி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பாடகராகும் ஆசையில் தனது குழந்தையை விற்றதை அவர் ஒத்துக் கொண்டார். குழந்தையை விற்றப் பணமான 1650 அமெரிக்க டாலரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விண்ணப்பக் கட்டணமாக கட்டியதாக அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இது இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து இரண்டாயிரத்து ஐநூற்று நாற்பத்தேழு ரூபாய் ஆகும்.
அதனைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிமன்றம் குழந்தைகள் கடத்தல் குற்றத்திற்காக சொவ்-விற்கு 5 வருடம் சிறை தண்டனை விதித்துள்ளது.