வீடு வாங்க பணம் எல்லாம் வேண்டாம்.. தர்ப்பூசணி பழம் கொடுங்க போதும்.. சீன நிறுவனங்கள் அறிவிப்பு!
பெய்ஜிங்: சீனாவில் மக்கள் கவரும் வகையில் ரியல் எஸ்டேட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து நாடுகளின் பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இரு ஆண்டுகளுக்கு மேலாகும் நிலையில், உலக நாடுகளின் பொருளாதாரம் இப்போது தான் மெல்ல மீண்டு வருகிறது.
இந்த பெருந்தொற்று காரணமாக பல்வேறு துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் கூட அனைத்து துறைகளும் முழுமையாக மீளவில்லை.

சீனா
குறிப்பாக ரியல் எஸ்டேட் துறை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாகச் சீன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தர்பூசணிகள் உள்ளிட்ட பிற விவசாய பொருட்களையும் கூட வீடுகளுக்கான கட்டணங்களாக ஏற்கத் தொடங்கிவிட்டன. அங்குள்ள மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட நகரங்களில் புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளை வாங்க மக்கள் பெரியளவில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் அவர்களை ஈர்க்க ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பணம் வேண்டாம்
அதாவது வீடுகளுக்கான தொகையை மக்கள் நேரடியாகப் பணமாகச் செலுத்தத் தேவையில்லையாம். அதற்குப் பதிலாக தர்பூசணி பழங்களைக் கொடுத்தாலேயே போதும். அதை வீட்டிற்கான தொகையில் இருந்து கழித்துக் கொள்வதாகச் சீன நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக கோதுமை மற்றும் பூண்டு போன்ற விவசாய பொருட்களைக் கட்டணமாகப் பெற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகச் சீன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அறிவித்து இருந்த நிலையில், இப்போது தர்பூசணி பழங்களை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளன.

தர்பூசணி போதும்
ஒரு கிலோ தர்பூசணி பழத்தை 20 யுவான், அதாவது இந்திய மதிப்பில் 236 ரூபாய்க்கு பெற்று கொள்வதாக நான்ஜிங் நகரத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில், "இது விளம்பத்திற்கான செயல் இல்லை. உள்ளூர் தர்பூசணி விவசாயிகளை ஆதரிப்பதே எங்கள் நோக்கம். விவசாயிகள் ஒரு அதிகபட்சமாக 5,000 கிலோ தர்பூசணியை கொடுத்து 1,00,000 யுவான் வரை வீட்டிற்கான தொகையில் இருந்து கழித்துக் கொள்ளலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

என்ன காரணம்
தொடர்ச்சியான கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக நுகர்வோர் மற்றும் வணிக நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரியல் எஸ்டேட் துறையைக் காப்பாற்றும் நடவடிக்கைகளைச் சீனா எடுத்து வருகிறது. ஏற்கனவே ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் வகையில், சீன வங்கிகள் நீண்ட கால கடன்களுக்கான முக்கிய வட்டி விகிதத்தை மிகப் பெரிய அளவில் குறைத்து உள்ளது. இப்போது அங்கு முதல்முறை வீடு வாங்குவோருக்கான வட்டி விகிதம் 4.4%ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் ரியல் எஸ்டேட் துறை பெரியளவில் மீளவில்லை. இதன் காரணமாகவே தர்பூசணிகள் போதும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சீனா
சீனாவில் இப்போது வீடு வாங்க இருக்கும் கடன் மட்டும் 10 டிரில்லயன் டாலரை தொட்டுள்ளது. இப்போது சீனாவில் இருக்கும் ஒட்டுமொத்த கடனில் வீட்டுக் கடன் மட்டும் சுமார் 27%இல் உள்ளது. சீனாவில் மிகப் பெரிய அளவில் வேலைகளை உருவாக்கும் துறையாக ரியல் எஸ்டேட் துறை இருந்தது. ஆனால் 2008இல் ஏற்பட்ட பொருளாதார நிதி நெருக்கடிக்குப் பின்னர், சீனாவில் உள்ள காலியான வீடுகளின் எண்ணிக்கை 65 மில்லியனைத் தாண்டியது. ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் பிரான்ஸ் நாட்டில் உள்ள அனைவருக்கும் இந்த வீடுகளே போதுமானதாகும்.












Click it and Unblock the Notifications