வங்கதேசத்தில் பதற்றம்.. சின்மோய் கிருஷ்ணதாஸின் வழக்கறிஞர் மீது கொடூர தாக்குதல்! சூறையாடப்பட்ட வீடு
டாக்கா: வங்கதேசத்தில் இந்து மத துறவியான சின்மோய் கிருஷ்ணதாஸ் தேசவிரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். இதை கண்டித்து தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் சூழலில் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட வழக்கறிஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார்.
வங்கதேசத்தில் நடந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நம்நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஷ் தலைமையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது வங்கதேசத்தில் இந்து துறவி கைது செய்யப்படுவது மற்றும் இந்துக்களின் உரிமை பறிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் இந்துக்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இந்த போராட்டத்துக்கு தொடக்க புள்ளி என்பது வங்கதேசத்தில் உள்ள இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவரான சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி எனப்படும் சந்தன் குமார் தர் கைது செய்யப்பட்டது தான். இவர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி டாக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இவர் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து சத்தோகிராமில் நடைபெற இருந்த பேரணியில் பங்கேற்க சென்றபோது கைது செய்யப்பட்டார். அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடந்த பேரணியில் அந்த நாட்டின் தேசியக்கொடி மீது காவி கொடி ஏற்றிய புகாரில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து தலைநகர் டாக்கா உள்பட பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. இதில் சிலர் இறந்துள்ளனர். ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். இதற்கிடையே தான் வங்கதேசத்தில் சிறுபான்மையினராக வசிக்கும் இந்துக்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று பாஜக, அதன் கூட்டணி கட்சிகள் உள்பட பல கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையே தான் தற்போது திடுக்கிட வைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது சின்மோய் கிருஷ்ணா தாஸின் வழக்கறிஞர் ராமேன் ராய் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதாவது அவரது வீட்டை இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் சூறையாடி அவரை தாக்கி உள்ளனர். ராமேன் ராய் தற்போது படுகாயம் அடைந்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். தற்போது அவர் உயிருக்கு போராடி வரும் நிலையில் சிகிச்சையில் இருக்கும் போட்டோ வெளியாகி உள்ளது.
இதுபற்றி இஸ்கானின் கொல்கத்தா செய்தி தொடர்பாளர் ராதாராம்ன் தாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வழக்கறிஞர் ராமேன் ராய் சிகிச்சை பெற்று வரும் போட்டோவை பதிவிட்டு, ‛‛வழக்கறிஞர் ராமேன் ராய்க்காக பிரார்த்தனை செய்வோம். அவரது ஒரே தவறு என்பது சின்மோய் கிருஷ்ண தாஸ்க்கு ஆதரவாக நீதிமன்றத்தில் செயல்பட்டது தான். அவரது வீட்டை இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் சூறையாடி தாக்குதல் நடத்தி உள்ளனர். தற்போது அவர் ஐசியூவில் உயிருக்கு போராடியபடி சிகிச்சையில் உள்ளார்'' என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக பாகிஸ்தானில் இருந்து தனி நாடு கோரி வங்கதேசத்தில் கடந்த 1971ல் போர் நடந்தது. அப்போது அங்கு இந்துக்களின் எண்ணிக்கை என்பது 22 சதவீதமாக இருந்தது. அதன்பிறகு இந்துக்களின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது வங்கதேசத்தின் மொத்த மக்கள் தொகையில் 8 சதவீதம் மக்கள் மட்டுமே இந்துக்களாக உள்ளனர். இந்துக்களின் எண்ணிக்கை குறைவதற்கு அந்த நாட்டில் உரிய அங்கீகாரம் கிடைக்காதது, சிறுபான்மையினராக உள்ள இந்துக்களை நோக்கிய தாக்குதல் உள்ளிட்டவை தான் காரணமாகும். தற்போது மீண்டும் அங்கு இந்துக்களுக்கு எதிரான அடக்குமுறை அரங்கேறி வருவதாக இந்து அமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications