எகிப்து: மோர்சி ஆதரவாளர்கள் பேரணி மீது துப்பாக்கிச் சூடு; 13 பேர் பலி
கெய்ரோ: எகிப்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் முகமது மோர்சியின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
எகிப்தில் முன்னாள் அதிபர் முகமது மோர்சியை மீண்டும் பதவியில் அமர்த்தக் கோரியும், புதிய அரசியலமைப்பு சட்டம் குறித்த வாக்கெடுப்பை ரத்து செய்யவும் வலியுறுத்தியும் அவரது இயக்கத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் தலைநகர் கெய்ரோவில் முகாம்கள் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, வாரத்தின் வெள்ளிக்கிழமை ‘ஜும்மா' தொழுகைக்கு பிறகு அவர்கள் சாலைகளில் பேரணியாக சென்று மீண்டும் எகிப்தின் அதிபராக மோர்சியை அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், மோர்சிக்கு ஆதரவாக போராடி வரும் சகோதரத்துவ அமைப்பை எகிப்தின் தற்காலிக பிரதமர் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம் போல் வெள்ளிக்கிழமையான நேற்றும் தொழுகைக்கு பின்னர் ஆயிரக்கணக்கான மோர்சியின் ஆதரவாளர்கள் தலைநகர் கெய்ரோ, அலெக்ஸாண்ட்ரியா, ஃபயும், மின்யா, சூயஸ் கால்வாய் பாயும் இஸ்மாய்லியா உள்ளிட்ட நகரங்களின் சாலைகளில் பேரணியாக சென்றனர்.

அவர்கள் மீது மோர்சியின் எதிர்ப்பாளர்களும், ராணுவ வீரர்களும் திடீர் தாக்குதல் நடத்தினர். பேரணிக்குள் நுழைந்த அவர்கள் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். பயங்கர ஆயுதங்களுடன் பேரணியாக வந்த 120 பேர் கைது செய்யப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது.
மோர்சியின் ஆதரவாளர்களின் மீது ராணுவமும் மோர்சியின் எதிர்ப்பாளர்களும் நடத்திய தாக்குதல்களில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications