தினமும் 8 லி தண்ணீர், சிறிய பெட்ரூம், இமெயில் வசதி... ‘செவ்வாயில்' வாழ பயிற்சி பெறும் 6 பேர்!
வாஷிங்டன்: முன்னதாக தேர்வு செய்யப்பட்ட ஆறு பேருக்கு செவ்வாய் கிரகத்தில் தங்குவதற்காக எட்டு மாதப் பயிற்சியை நாசா துவக்கியுள்ளது. இதற்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப் பட்ட கூண்டில் அவர்கள் தங்கியுள்ளனர்.
சர்வதேச அளவில் செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. செவ்வாயில் மனிதனைக் குடியேற்ற வேண்டும் என்பதே அவற்றின் முக்கிய நோக்கமாக உள்ளது.
அமெரிக்காவின் ‘நாசா' விண்வெளி மையம், வருகிற 2030-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்பி அங்கு தங்க வைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கென மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
அதில் தேர்வான ஆறு பேருக்கு செவ்வாய் கிரகத்தில் தங்குவதற்கான பயிற்சிகளைத் தற்போது தொடங்கியுள்ளது நாசா.
டூம்...
இந்தப் பயிற்சியானது மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கென ஹவாய் தீவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆயிரம் சதுர அடியில் விசேஷ கூண்டு வடிவ ‘டூம்' உருவாக்கப்பட்டுள்ளது.
2 மாடி...
இந்த டூமானது 2 அடுக்கு மாடிகளையும் கொண்டது. அதில் 3 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 6 பேர் பயிற்சி பெறுகின்றனர்.
சிறிய படுக்கை அறைகள்...
மேலும், அவர்களுக்கு தனித்தனியாக 6 சிறிய படுக்கை அறைகள் அவற்றில் வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும் அவர்கள் அங்கு தங்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
உடற்பயிற்சி எந்திரங்கள்...
அந்த டூமில் இருந்தபடியே அவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள சைக்கிள், டிரட்மில் எந்திரம் ஆகியவற்றையும் நாசா ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.
8 லிட்டர் தண்ணீர்...
அதில் தங்கியுள்ள 6 பேருக்கும் நாள் ஒன்றுக்கு 8 லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த 8 லிட்டர் தண்ணீரையே அவர்கள் குடிக்க, குளிக்க, சமைக்க, மற்றும் உடைகளை சுத்தம் செய்ய போன்ற அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது.
இமெயில் வசதி...
மேலும் அவர்கள் அங்கிருந்தபடியே தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைத் தொடர்பு கொள்ள வசதியாக இமெயில் அனுப்பும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. ஆனால், பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு இமெயில் சென்றடைய 40 நிமிடங்கள் ஆகும். எனவே, அதன்படியே இந்த டூமிலும் இமெயில் வசதி செய்யப் பட்டுள்ளது.
விஞ்ஞானிகள் கருத்து....
இதன்படி, இனி வரும் எட்டு மாதங்களுக்கு வெளி உலகத் தொடர்பு என்பதே இல்லாமல் இந்த ஆறு பேரும் வாழப் போகிறார்கள். இப்பயிற்சியின் முடிவைக் கொண்டே செவ்வாயில் மனிதர்கள் வசிப்பது குறித்து தெளிவான முடிவுகள் கிடைக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.