ஐ.நா. கூட்டத்தின் போது காஷ்மீரில் பிரச்சனையை உருவாக்க மசூத் அசார் மூலம் பாக் பயங்கர சதி திட்டம்
Recommended Video
டெல்லி: ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது காஷ்மீர் விவகாரம் பேசப்பட வேண்டும் என்பதற்காகவே வன்முறையை உருவாக்க பயங்கரவாதி மசூத் அசாரை பாகிஸ்தான் ரகசியமாக விடுதலை செய்துள்ளதாம்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுக்கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டமும் நடைபெற உள்ளது.

இந்நிலையில்தான் திடீரென பாகிஸ்தான் சிறையில் இருந்து ஐ.நா.வால் பயங்கரவாதி என பிரகடனம் செய்யப்பட்ட மசூத் அசார் ரகசியமாக விடுதலை செய்யப்பட்டதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தன. அத்துடன் பாகிஸ்தான் தமது எல்லைகளில் ராணுவத்தை குவித்து வருவதையும் உளவுத்துறை தகவல்கள் சுட்டிக்காட்டின.
தற்போது மசூத் அசாரை விடுவித்ததன் பின்னணியில் உள்ள பயங்கர சதி குறித்தும் உளவுத்துறை வட்டாரங்கள் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளன. இம்மாத இறுதியில் ஐ.நா.வின் ஆண்டு பொதுக்கூட்டம் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது.
ஏற்கனவே சர்வதேச அரங்குகளில் ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தான் எழுப்பி பார்த்தது. ஆனால் எந்த ஒரு நாடும் பாகிஸ்தானை ஆதரிக்க தயாராக இல்லை என்பதால் மூக்குடைபட்டது.
இதனால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளை உருவாக்கி அதன் மூலம் காஷ்மீர் பிரச்சனையை பூதாகரமாக்க பாகிஸ்தான் திட்டமிட்டிருக்கிறதாம். இந்த சதித் திட்டத்தை நிறைவேற்றவே மசூத் அசாரை ரகசியமாக சிறையில் இருந்தும் அந்நாடு விடுவித்திருக்கிறதாம்.
ஜம்மு காஷ்மீரில் புல்வாமாவில் கொடூர தாக்குதல்களை நடத்தியது போல் ஒரு சம்பவத்தை அரங்கேற்றி அம்மாநிலத்தின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் சதி செயல்களை அரங்கேற்றுவதற்கு மசூத் அசார்தான் சரியான நபர் என கருதியே அவரை பாகிஸ்தான் விடுதலை செய்திருக்கிறதாம். இதனை சுட்டிக்காட்டி பாதுகாப்பு படையினர் உசார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications