மொரோக்கோ நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,000ஐ கடந்தது! வெளியான ஷாக் வீடியோ
ரபாத்: வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000ஐ கடந்திருக்கிறது. மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
6.8 எனும் ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஏராளமான வீடுகள் சரிந்து விழுந்திருக்கின்றன. அட்லஸ் மலைத் தொடரை ஒட்டியுள்ள பகுதிகள் இந்த நில நடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இங்கு பெரும்பாலும் பழைய வீடுகள் இருப்பதால் ஏறத்தாழ அனைத்து வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன. அதேபோல இந்த மலைத் தொடரில் உள்ள கிராமங்கள் ஒவ்வொன்றுக்கும் நீண்ட இடைவெளி இருப்பதால் இந்த கிராமங்களில் மீட்பு படைகள் சென்று சேர தாமதமாகியுள்ளன.

மொராக்கோ நாட்டின் நேரப்படி இரவு 11 மணிக்கு மேல் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. எனவே மக்களால் உடனடியாக வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை. இதன் காரணமாகவும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. தொடக்கத்தில் 600 பேர் உயிரிழந்ததாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 1,000ஐ கடந்திருக்கிறது. மேலும் மீட்பு பணிகளில் உள்ள தொய்வு, மீட்பு படைகள் சென்று சேர்வதில் உள்ள சிக்கல்கள், அடிப்படை மருத்துவ வசதி இல்லாதது ஆகியவை சேர்த்து இந்த உயிரிழப்பு எண்ணிக்கையை அதிகரித்துள்ளன.
அமெரிக்க புவியியல் ஆய்வு மைய கூற்றின்படி, மராகேஷுக்கு தென்மேற்கே 71 கிமீ அட்லஸ் மலைத் தொடரின் 18.5 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என்பது தெரிய வருகிறது. உயிரிழப்பு ஒருபுறம் இருந்தாலும், படுகாயங்களுடன் உயிர் பிழைத்தவர்களுக்கு போதிய மருத்துவ வசதி கிடைக்காததால் மேலும் அதிகமானவர்கள் உயிரிழக்க கூடும் என்றும் சொல்லப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட குறிப்பிட்ட சில நிமிடங்களிலேயே மின் இணைப்பும், தொலை தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் மீட்பு படையினர் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு வருவது தாமதமாகியுள்ளது. முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு சிறிது நேரம் கழித்து 4.9 ரிக்டர் அளவில் இரண்டாவதாக மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் வீதிகளிலேயே நிரந்தரமாக தங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை கூறியுள்ளது. நிலநடுக்கம் தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications