தெற்கு சூடானில் வெடித்து சிதறிய எண்ணெய் லாரி... உடல் கருகி பலியானோர் எண்ணிக்கை 183 ஆக உயர்வு
மரிடி : தெற்கு சூடானில் விபத்துக்குள்ளான எண்ணெய் லாரி வெடித்துச் சிதறியதில் பலியானோர் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது.
மேற்கு ஈக்குவட்டோரியா பகுதியில் அமைந்துள்ள மரிடி என்ற இடத்தில் நேற்று முன்தினம் கச்சா எண்ணெய் ஏற்றி சென்ற லாரி விபத்துக்குள்ளாகி, எண்ணெய் கொட்ட தொடங்கியது.
அதை பிடித்து செல்வதற்காக ஏராளமான மக்கள் திரண்டனர். அப்போது அந்த லாரி, எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது. இதனால் மக்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த கோர விபத்தில் தீக்காயம் அடைந்தும் உடல் கருகியும் 100 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை நேற்று 183 ஆக உயர்ந்துள்ளது.
அதுபற்றிய தகவலை வெளியிட்ட மரிடி கவுண்டி கமிஷனர் வில்சன் தாமஸ் யாங்கா, மோசமான நிலையில் உள்ளவர்களுக்கு மேல்சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படுவதாக தெரிவித்தார்.
எனினும் பலர் தீக்காயங்களுடன் தவித்து வருவதால், பலி எண்ணிக்கை 200 ஐத் தாண்டும் என்று அஞ்சப்படுகிறது.