ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி... ரத்த உறைதல் பிரச்சினை.. நிரந்தர தடை விதித்த முதல் நாடு.. அடுத்து என்ன?
டென்மார்க்: மோசமான ரத்த உறைத்தல் பிரச்சினையைத் தொடர்ந்து ஆக்ஸ்போர்டு தடுப்பூசியைப் பயன்படுத்த டென்மார்க் அரசு முற்றிலுமாக தடை விதித்துள்ளது.
உலகெங்கும் கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு மிக மோசமாக உள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தடுப்பூசி மட்டுமே கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்தியுள்ளன.
கொரோனா தடுப்பூசிகள்
அமெரிக்க நிறுவனங்களான பைசர், மாடர்னா மற்றும் பிரிட்டன் ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய கொரோனா தடுப்பூசிகள் உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. அதில் ஆஸ்போர்டு தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்களுக்கு அபூர்வமான, அதேநேரம் மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுவதாகப் புகார் எழுந்தது.
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி
இதையடுத்து முதலில் ஜெர்மனி, போலந்து, பிரான்ஸ், இத்தாலி போன்ற பல ஐரோப்பிய நாடுகள் ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்குத் தற்காலிகமாகத் தடை விதித்தன. இருப்பினும், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும் அதில் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்தது. இதையடுத்து ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றாகத் தடையை விலக்கிக் கொண்டன.
டென்மார்க்கில் தடை
இந்தச் சூழ்நிலையில், ரத்தை உறைதல் பிரச்சினை காரணமாக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்குத் தடை விதிப்பதாகவும் நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இல்லாமல் மேற்கொள்ளப்படும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 58 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட டென்மார்க்கில் இதுவரை 1.4 லட்சம் பேருக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவர்களில் இரண்டு பேருக்கு மட்டுமே ரத்த உறைதல் பிரச்சனை ஏற்பட்டது.
கோவிஷீல்டு தடுப்பூசி
கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இந்தத் தடை உத்தரவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு நிரந்தரமாகத் தடை விதித்த முதல் நாடாக டென்மார்க் உள்ளது. இந்தத் தடையால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு தடுப்பூசியே இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்தி செய்யப்படுகிறது.