ஆதி தமிழர்கள் பயன்படுத்திய கோரைக் கிழங்கு.. ஆதி மனிதர்களுக்கும் அருமருந்தாக திகழ்ந்த ஆச்சரியம்!
யார்க், இங்கிலாந்து: ஆதி காலத்தில் தமிழர்கள், மருத்துவத்திற்காகப் பயன்படுத்தி வந்த கோரைக் கிழங்கு, ஆதி மனிதர்கள் மத்தியிலும் மருத்துவ பயன்பாட்டில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரைக் கிழங்கானது அருமையான மருந்தாகும். நமது சித்த மருத்துவத்தில் இதற்கு தனி இடமும் உண்டு.
ஆனால் கிட்டத்தட்ட 7000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களும் இதை பயன்படுத்தி வந்துள்ளதை தற்போது ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சித்த மருத்துவத்தின் தொன்மை மற்றும் சிறப்பை பறை சாற்றுவதாக இது உள்ளது.
சூடானில் நடந்த ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் சூடானில் அப்போது வசித்த மக்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே தொடர்பு இருந்திருக்கலாமோ என்ற ஆச்சரியகரமான சந்தேகமும் எழுந்துள்ளது.
7000 ஆண்டுகளுக்கு முன்பு
சூடானின் அல் கிடாய் என்ற பகுதியில் 7000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் சில எலும்புக் கூடுகள் முழுமையாக கிடைத்துள்ளன. இந்த எலும்புக் கூடுகளின் பற்களை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் அதிலிருந்து சில முக்கியத் தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
நைல் நதிக்கரையோரம்
இந்த அல் கிடாய் என்பது வரலாற்று கால நகரமாகும். மத்திய சூடானில், நைல் நதிக் கரையோரமாக உள்ளது இந்த நகரம்.
வேதிப் பொருள் ஆய்வு
இந்த எலும்புக் கூடுகளின் பற்களில் வேதிப் பொருட்கள், மைக்ரோபாசில்களை ஆராய்ந்தபோது அக்காலத்து மனிதர்களின் உணவில் கோரைக் கிழங்கு முக்கிய உணவாக இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.
சைப்ரஸ் ரொடென்டஸ்
கோரைக் கிழங்கின் தாவரவியல் பெயர் சைப்ரஸ் ரொடென்டஸ். இது சைப்ரேஸி குடும்பத்தைச் சேர்ந்த புல் வகையாகும். இதன் கிழங்குதான் உணவாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
அருமருந்து
கோரைக் கிழங்கு அருமருந்தாகும். பல மருத்துவ பயன்பாடுகள் இதில் உள்ளன. இதை அந்தக் காலத்து மக்கள் பயன்படுத்தி பலன் அடைந்துள்ளனர்.
பற்களில் பாக்டீரியா தாக்காமல் காக்கும்
பற்களின் வேர்களை அழித்து பல்லையே காலி செய்யும் அளவுக்கு சக்தி வாய்ந்த ஸ்டிர்ப்டோகாக்கஸ் மூடான்ஸ் என்ற பாக்டீரீயாவை அழிக்கும் சக்தி படைத்தது இந்த கோரகை் கிழங்கு. இதனால் அக்காலத்து மக்கள் இதை அதிகம் பயன்படுத்தி உறுதி வாய்ந்த பற்களுடன் திகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
கார்போஹைட்ரேட்ஸ் நிறைந்தது
அதேபோல கோரைக்கிழங்கில் கார்போஹைட்ரேஸ் நிறைந்துள்ளது. எனவே இது சக்தியும் அளிக்க வல்லதாகும்.
பல் சிதைவு குறைவு
சூடானில் கிடைத்துள்ள பல்வேறு ஆதி கால மனித எலும்புக் கூடுகளில் பல் சிதைவு மிக மிக அரிதாகவே இருப்பதும் இந்த கோரைக் கிழங்கின் பயன்பாட்டை உறுதி செய்வதாக உள்ளது.
விவசாயம் வருவதற்கு முன்பே
அக்காலத்தில் விவசாயம் வருவதற்கு முன்பே மனிதர்களின் தாவரங்களின் பயன்பாட்டை அறிந்து வைத்துள்ளதும் இதன் மூலம் தெளிவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
சித்த மருத்துவத்தில் கோரைக் கிழங்கு
தமிழர்களின் சித்த மருத்துவத்திலும் கூட கோரைக் கிழங்குக்கு முக்கிய இடம் உண்டு என்பதால் ஆதி தமிழர்களுக்கும், ஆதி சூடானியர்களுக்கும் இடையே தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
களைச் செடியான பரிதாபம்
ஆனால் இந்த கோரைப் புல்லானது காலப் போக்கில் களைச் செடியாக பார்க்கப்பட்டு ஒதுக்கவும் பட்டு விட்டது. ஆனால் அது எப்படிப்பட்ட அரு மருந்து என்பதை சூடான் எலும்புக் கூடுகள் எடுத்துக் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.