வங்கதேசத்தில் பயங்கரம்! பதற்றத்திற்கு நடுவே வெடிபொருள் வீச்சு! மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்.. ஒருவர் பலி
டாக்கா: வங்கதேசம் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. வங்கதேசத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நீடித்து வரும் நிலையில், இன்று தலைநகர் டாக்காவில் உள்ள மோக்பசார் பகுதியில் கையெறி குண்டை சிலர் வீசியுள்ளனர். சுதந்திர போராட்டக்காரர்களின் நினைவிடம் அருகே கையெறி குண்டு வீசப்பட்டதில், படுகாயமடைந்த ஒருவர் பலியாகி உள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக உள்ள வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர் போராட்டம் வெடித்தது. அந்த போராட்டம் வன்முறைகளாக மாறிய நிலையில், அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.

இந்தியாவில் ஓராண்டுக்கும் மேலாக ஷேக் ஹசீனா தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து நோபல் பரிசு வென்ற முகம்மது யூனுஸ் தலைமையில் அங்கு இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர் போராட்டத்தை முன்னின்று நடத்தியவரான ஷெரீப் உஸ்மான் ஹாதி.
அவர் இன்குலாப் மோஞ்சோ என்ற அரசியல் கூட்டமைப்பை உருவாக்கி இருந்தார். அதன் சார்பில், வரும் பிப்ரவரி 12-ம் தேதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் போட்டியிட இருந்தார். தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட ஷெரீப் உஸ்மான் ஹாதியை மர்ம நபர்கள் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்து அவர் உயிரிழந்தார்.
அவரது கொலையை கண்டித்து அவருடைய ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதற்கிடையே, துணி ஆலையில் வேலை பார்த்து வந்த தீபு சந்திரதாஸ் என்ற இந்து வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்தடுத்த சம்பவங்களால், வங்கதேசம் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. வங்கதேசத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நீடித்து வரும் நிலையில், இன்று தலைநகர் டாக்காவில் உள்ள மோக்பசார் பகுதியில் கையெறி குண்டை சிலர் வீசியுள்ளனர். சுதந்திர போராட்டக்காரர்களின் நினைவிடம் அருகே கையெறி குண்டு வீசப்பட்டதில், ஒருவர் படுகாயம் அடைந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நிகழ்விடத்தில் இருந்த பாலத்தின் மேல் பகுதியில் இருந்து இந்த கையெறி குண்டை ஒரு கும்பல் வீசிவிட்டு தப்பி ஓடியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கையெறி குண்டு வீசியவர்களின் பின்னணி குறித்தோ, எதற்காக வீசினர் என்பது குறித்தோ இன்னும் தெரியவில்லை. தற்போது வரை இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.












Click it and Unblock the Notifications