நீங்க தானே அனுமதி கொடுத்தீங்க.. பதைபதைப்புடன் இந்திய கப்பலில் இருந்து ஈரானுக்கு போன கால்.. வெளியான ஆடியோ
தெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற இந்திய கப்பல்கள் இரண்டின் மீது ஈரான் கடற்படை தாக்குதல் நடத்தியது. ஈரான் தாக்கியதும், அந்த கப்பலில் இருந்து ஈரானுக்கு அவசர கால அழைப்பு சென்றுள்ளது. நீங்கள்தானே அனுமதி கொடுத்தீர்கள் என்று அவர் பேசும் 30 நொடி ஆடியோ வெளியாகியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையே பாகிஸ்தானில் கடந்த வாரம் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையே விரைவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

30 வினாடிகள் ஆடியோ வெளியானது
இதற்கிடையே, லெபனான் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மூடி வைத்து இருந்த ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதாக இரு தினங்களுக்கு முன்பாக ஈரான் அறிவித்தது. ஆனால், அமெரிக்கா ஈரானிய துறைமுகங்களை முற்றுகைவியிடுவதை கைவிட மறுத்ததால் முடிவில் இருந்து பின் வாங்கிய ஈரான், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும் என்று தெரிவித்தது.
இந்த சூழலில் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற இந்திய கப்பல்கள் இரண்டின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஈரானின் தாக்குதலுக்கு உள்ளான கப்பல் ஒன்றில் இருந்து ஈரானுக்கு போன அவசர அழைப்பின் உரையாடல்கள் வெளியாகியுள்ளன. ஆபத்தான (distress) நேரங்களில் விடுக்கப்படும் அவசர அழைப்பாக இது சென்றுள்ளது. 30 வினாடிகள் கொண்ட இந்த உரையாடலில், இந்திய கப்பல் ஒன்றில் இருந்த சிப்பந்திகளில் ஒருவர் ஈரான் கடற்படையை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
நீங்கள்தானே ஒப்புதல் கொடுத்தீர்கள்
அந்த உரையாடலில், செபாஹ் நேவி, செபாஹ் நேவி, இது சன்மார் ஹெரால்ட் மோட்டார் டேங்கர்.. நீங்கள்தானே ஒப்புதல் கொடுத்தீர்கள். உங்கள் பட்டியலில் எனது பெயர் இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது தாக்குதல் நடத்துகிறீர்கள். என்னை திரும்பி போக அனுமதியுங்கள்.. என்று பேசும் ஆடியோ வெளிவந்துள்ளது. அந்த கப்பல் ஹார்மூஸ் ஜலசந்தியின் கிரீன் ஏரியாவில் இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அந்த டேங்கர் கிழக்கு நோக்கி பயணிக்கும் போது தனது தானியங்கி அடையாள அமைப்பை அணைத்து விட்டு பிறகு, கிழக்கு பகுதியை அடைந்ததும் அதை மீண்டும் ஆன் செய்து இருக்கிறது. தாக்குதலுக்கு உள்ளான மற்றொரு கப்பல் ஜாக் அர்னவ் என்ற டேங்கர் என்று அடையாளம் தெரிந்துள்ளது. ஈரான் நடத்திய தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கவலை தெரிவித்த இந்தியா
இந்திய கப்பல்களை குறிவைத்து நேற்று ஈரான் தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், உடனடியாக ஈரானுக்கான தூதரை நேரில் அழைத்து இந்தியா தனது கவலையை தெரிவித்தது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், "வணிகக் கப்பல்களின் போக்குவரத்து மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பிற்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தியாவுக்கு வர இருந்த பல கப்பல்கள் பாதுகாப்பாக கடக்க ஈரான் இதற்கு முன்பாக உதவியுள்ளது" என்றும் தெரிவித்துள்ளது.
ஈரான் புரட்சிகர காவல் படைக்கு சொந்தமான 2 படகுகள் திடீரென இந்திய கப்பல்கள் மீது நடத்திய தாக்குதலில் கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் சேதம் அடைந்தன. மற்றொரு கப்பலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது. சிறிய ரக ஏவுகணை மற்றும் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை கடக்காமல் இந்திய கப்பல்கள் பாரசீக வளைகுடாவில் நிறுத்தப்பட்டன. அந்த வகையில் 13 கப்பல்கள் அந்த பகுதியில் நிற்பதாக தரவுகள் கூறுகின்றன.














Click it and Unblock the Notifications