கடலில் விழுந்த ஏர்ஏசியாவின் மற்றொரு கருப்பு பெட்டியும் மீட்பு
ஜகர்தா: இந்தோனேசிய கடலில் விழுந்து மூழ்கிய ஏர்ஏசியா விமானத்தின் கருப்பு பெட்டியின் மற்றொரு பாகம் இன்று மீட்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி 162 பேருடன் இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூருக்கு கிளம்பிய ஏர்ஏசியா விமானம் க்யூஇசட்8501 ராடாரில் இருந்து மாயமானது. பின்னர் விமானம் இந்தோனேசியாவின் ஜாவா கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜாவா கடலில் இருந்து இதுவரை 48 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் விமானத்தின் வால் உள்ளிட்ட பாகங்களும் மீட்கப்பட்டன. இந்நிலையில் திங்கட்கிழமை விமானத்தின் கருப்பு பெட்டியின் ஒரு பாகமான டேட்டா ரெக்கார்டர் மீட்கப்பட்டது. கருப்பு பெட்டியின் மற்றொரு பாகமான காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் அதாவது விமானிகள், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசியவற்றை பதிவு செய்த கருவி கிடைக்கவில்லை.
வாய்ஸ் ரெக்கார்டர் கருவி கிடந்த இடம் தெரிந்தபோதிலும் அதை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விமானம் விபத்துக்குள்ளாக என்ன காரணம் என்பது தெரிய வரும்.
விமானம் மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானது என்று தான் இதுவரை கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.