யாருய்யா இந்த ஹமாஸ் இயக்கம்? 30 நிமிடத்தில் 7,0000 ராக்கெட்டுகள்..இஸ்ரேல் ஈரக்குலையை நடுங்க செய்தது!
டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டின் மீது சில நிமிடங்களில் 7000-க்கும் அதிகமான ராக்கெட்டுகளை வீசி அந்நாட்டையே குலைநடுங்க வைத்திருக்கிறது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கம். இஸ்ரேல் தற்போது பதிலடி கொடுத்து வருகிறது.
இஸ்ரேல்- ஹமாஸ் இயக்க யுத்தம் பல ஆயிரம் உயிர்களை தொடர்ந்து பலி கொண்டு வருகிறது. தற்போதைய யுத்தமும் மிகப் பெரும் நாசகார பேரழிவையே ஏற்படுத்தக் கூடும் என்பது உலக நாடுகளின் அச்சம்.

ஹமாஸ் பின்னணி: ஹமாஸ் இயக்கம், பாலஸ்தீனத்தில் உள்ள மிகப் பெரிய இஸ்லாமியர்களின் ஆயுதம் தாங்கிய குழு. அப்பகுதியில் செயல்படும் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்று ஹமாஸ். காஸா அல்லது காசா முனை என்ற பாலஸ்தீனப் பகுதியை நிர்வகித்து வருவது ஹமாஸ் இயக்கம். இஸ்ரேலுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய யுத்தம் நடத்துகிறது இந்த ஹமாஸ் இயக்கம். ஹமாஸ் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் பிரகடனப்படுத்தி இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் ஹமாஸ் இயக்கத்தின் ராணுவ அமைப்பை பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது.
ஹமாஸ் இயக்கம்: மேற்கு கரை, காஸா முனை பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்த முதலாவது யுத்தத்துக்குப் பின்னர் 1980களின் தொடக்கத்தில் ஹமாஸ் இயக்கம் நிறுவப்பட்டது. 1967-ம் ஆண்டு நடந்த முதலாவது பாலஸ்தீனம்- இஸ்ரேல் யுத்தத்தின் போது இந்த பகுதிகள் இஸ்ரேல் நாட்டால் ஆக்கிரமிக்கப்பட்டது. 1946-ம் ஆண்டு ஜெருசலேமில் செயல்பட்ட Palestinian Muslim Brotherhood இயக்கத்தின் வழித்தோன்றலாக ஹமாஸ் இயக்கம் கருதப்படுகிறது.
ஹமாஸ், அராபத் இயக்கம்: யாசர் அராஃபத்தின் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தால் பாலஸ்தீனர்களின் முழு விடுதலையைப் பெற்றுத் தர முடியாத அதிருப்தியில் பிறந்ததுதான் ஹமாஸ் இயக்கம். ஆயுதம் தாங்கிய இயக்கமாக இருந்த போதும் யாசர் அராஃபத் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுடன் ஒருவித சமரசப் போக்கை கடைபிடிப்பதாக ஹமாஸ் குற்றம்சாட்டி உருவெடுத்தது. 1990களில் நார்வேயின் ஒஸ்லோவில் இஸ்ரேல் - பாலஸ்தீன விடுதலை இயக்கம் இடையேயான அமைதி ஒப்பந்தத்தை ஹமாஸ் மூர்க்கமாக எதிர்த்தது. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து தற்கொலைப் படைத் தாக்குதல்களை முன்னெடுத்ததன் மூலம் ஹமாஸ் இயக்கம் உலக அரங்கில் அறியப்பட்டது.
தற்கொலைப் படை தாக்குதல்கள்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஒஸ்லோ ஒப்பந்தத்தில் இருந்து விலகியதைத் தொடர்ந்து ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதல்களும் தீவிரமடைந்தன. 2000, 2005-ம் ஆண்டு காலங்களில் அதிகமான தற்கொலைப் படை தாக்குதல்களை ஹமாஸ் நடத்தி தங்களது இருப்பை வெளிப்படுத்தியது. இது இஸ்ரேலுக்கு எதிரான 2-வது யுத்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
2014-ல் கொடூர யுத்தம்: யாசர் அராபத் மறைவுக்குப் பின்னர் 2006-ல் பாலஸ்தீன சட்டசபை கவுன்சில் தேர்தலில் வென்ற ஹமாஸ் இயக்கத்தின் கீழ் மேற்கு கரை, காஸா பகுதிகள் நிர்வாகம் வந்தது. இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான மிக மோசமான யுத்தம் 2014-ல் நடைபெற்றது. அம்மோதல்களில் 2,251 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் 1462 பேர் பொதுமக்கள். இஸ்ரேல் தரப்பில் 67 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
2021 யுத்தம்: இதன்பின்னர் 2021-ல் ஜெருசலேமின் அல் அக்ஸா மசூதி வளாகத்தில் இஸ்ரேலிய படைகளுடனான மிகப் பெரும் மோதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் படுகாயமடைந்தனர். அப்போது 11 நாட்கள் யுத்தம் நடந்தது. இதில் 250 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தரப்பில் 13 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இப்போது புதிய யுத்தம் தொடங்கி இருக்கிறது. இஸ்ரேல் மீது 7,000 ராக்கெட்டுகளை வீசி அந்நாட்டையே நிலைகுலைய வைத்திருக்கிறது ஹமாஸ். இஸ்ரேலும் பதிலடியை கொடுத்து வருவதால் உலகம் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.












Click it and Unblock the Notifications