எஜமானியைக் கொன்றவனை அடையாளம் காட்ட கோர்ட் படியேறிய 9 வயது நாய் ‘டாங்கோ’
பாரீஸ்: பிரான்ஸில் தன்னுடைய எஜமானரைக் கொலை செய்த குற்றவாளியை அடையாளம் காட்டுவதற்காக ஒன்பது வயது நாய் ஒன்று நீதிமன்றத்துக்கு சாட்சி சொல்ல வந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தனது 59 வயது எஜமானியுடன் வசித்து வந்தது டன் டாங்கோ எனும் நாய். ஒன்பது வயதான டாங்கோ ‘லாப்ரடார்' வகையைச் சேர்ந்தது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு டாங்கோவின் எஜமானி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப் பட்டார். முதலில் தற்கொலையா இருக்கலாம் எனக் கருதப்பட்ட அந்த மரணம், சில காரணங்களால் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப் பட்டது.
இது தொடர்பான வழக்கு தற்போது பிரான்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கொலையாளிகள் என்று சந்தேகிக்கப்படும் சிலரை கைது செய்துள்ளனர்.
எஜமானியின் மரணத்திற்கு ஒரே சாட்சி டாங்கோ மட்டுமே. எனவே, அதன்மூலம் உண்மையான கொலையாளியை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளனர் போலீசார்.
அதன்படி, கைது செய்யப்பட்டவர்களில் யார் உண்மையான குற்றவாளி என்று அடையாளம் காட்டுவதற்காக அந்த நாயை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர்.
நாயிடமிருந்து வெளிப்படும் எதிர்வினையை வைத்து யார் குற்றவாளி என்று அறிந்து கொள்ள, கைதிகள் ஒவ்வொருவரும் நாயை அடிப்பதுபோல் பாசாங்கு செய்ய வைக்கப்பட்டனர். அப்போது அவர்களில் ஒருவரைப் பார்த்து அந்த நாய் கோபமாகக் குரைத்ததாக கூறப்படுகிறது. தற்போது இதனடிப்படையில் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரான்ஸில் சாட்சி சொல்லவும், குற்றவாளிகளை அடையாளம் காட்டவும் நாய்களை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வது என்பது புதிதல்ல. ஏற்கனவே கடந்த 2008-ல் ஸ்கூபி எனும் பெயருடைய நாய் குற்றவாளியை அடையாளம் காண்பிப்பதற்காக நீதிமன்றத்திற்குச் அழைத்து வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.