பாக். மக்கள் யாரும் காதலர் தினம் கொண்டாடக் கூடாது: அதிபர் ஹுசைன் உத்தரவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மக்கள் யாரும் காதலர் தினத்தை கொண்டாட வேண்டாம் என்று அந்நாட்டு அதிபர் மம்மூன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. பாகிஸ்தானில் உள்ள பல்வேறு நகரங்களிலும் காதலர் தினம் பிரபலமானது. இந்நிலையில் பாகிஸ்தான் அதிபர் மம்மூன் ஹுசைன் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், காதலர் தினத்திற்கும் பாகிஸ்தான் கலாச்சாரத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை, அது இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு எதிரானது என்றார்.
காதலர் தினம்
காதலர் தினத்தால் ஒரு பயனும் இல்லை. அதனால் பாகிஸ்தான் மக்கள் யாரும் காதலர் தினத்தை கொண்டாட வேண்டாம் என ஹுசைன் தெரிவித்துள்ளார்.
தடை
கைபர் படுங்க்வா மாகாணத்தில் உள்ள கோஹட் அரசு காதலர் தின வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்கள் விற்க கடைகளுக்கு தடை விதிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
பெஷாவர்
காதலர் தினம் ஒன்றுக்கும் உதவாத தினம். அதனால் காதலர் தினத்தை கொண்டாட பெஷாவரில் உள்ள உள்ளூர் கவுன்சில் தடை விதித்துள்ளது.
கராச்சி
காதலர் தின கொண்டாட்டத்தை எதிர்த்து கராச்சியில் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காதலுக்கும், காதலர் தினத்திற்கும் எதிராக கோஷமிட்டனர். ஜாமியத் இ உலமா மத கட்சியைச் சேர்ந்த பெண்கள் காதலர் தின வாழ்த்து அட்டைகளை தீ வைத்து எரித்தனர்.