ரூட்டை மாற்றும் "சீன டிராகன்!" இந்தியாவிடம் கேட்ட உதவி.. காரணம் டிரம்ப்தான்! எதிர்பார்க்காத ட்விஸ்ட்
பெய்ஜிங்: அமெரிக்க அதிபரான டிரம்ப் ஒரு பக்கம் தாறுமாறாக வரிகளைப் போடத் தொடங்கியுள்ளார். டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கைகள் சர்வதேச அரசியலை மாற்றுவதாக இருக்கிறது. யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்தியாவின் ஒத்துழைப்பைச் சீனா நாடியிருக்கிறது. இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற குரல் சீனாவிடம் இருந்தே வந்துள்ளது முக்கியமானதாகக் கவனிக்கப்படுகிறது.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற நாள் முதலே டிரம்ப் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் முக்கியமானது வரிகள். பல நாடுகள் மீது டிரம்ப் தொடர்ச்சியாக வரிகளை அறிவித்து வருகிறார். முதற்கட்டமாகச் சீனா, கனடா, மெக்சிகோ மீது வரிகளை அறிவித்த டிரம்ப், அடுத்த மாதம் முதல் அனைத்து நாடுகள் மீதும் ரெசிப்ரோகல் வரி விதிக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

சர்வதேச வர்த்தகம்
ஒரு நாடு எவ்வளவு வரி போடுகிறதோ.. அதே அளவுக்குப் பதிலுக்கு வரி விதிப்பதே ரெசிப்ரோகல் வரியாகும். டிரம்பின் இந்த வரிகள் உலக நாடுகளைக் கடுமையாகப் பாதிக்கிறது. இது வர்த்தக போரைக் கூட தொடங்கலாம் எனப் பலரும் எச்சரிக்கிறார்கள். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பபெட் கூட இதைப் போருக்கு இணையான நடவடிக்கை என்றே குறிப்பிட்டிருந்தார். ஆனால், இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் டிரம்ப் தொடர்ந்து வரிகளை விதித்து வருகிறார். இது சர்வதேச வர்த்தகத்தையும் கூட கடுமையாகப் பாதிப்பதாக இருக்கிறது.
டோனை மாற்றும் சீனா
இதற்கிடையே இத்தனை நாட்கள் நம்முடன் மோதல் போக்கைக் கொண்ட சீனா இப்போது திடீரென தனது டோனை மாற்றியுள்ளது. பரஸ்பர வெற்றிக்காக இந்தியாவும் சீனாவும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனச் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா- சீனா இருதரப்பு உறவுகள் குறித்துத் தொடர்ந்து பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் வாங், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் கடந்தாண்டு பாசிட்டிவ் முன்னேற்றம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.
மேலும், தற்போது உலகில் நிலவும் சூழலைச் சமாளிக்க இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு தேவை என்பதைக் குறிப்பிடும் வகையில் "டிராகன் யானை டான்ஸ்" மட்டுமே இரு தரப்பினருக்கும் சரியான தேர்வு என்று சீனா எப்போதும் நம்புகிறது என்றும் குறிப்பிட்டார்.
இந்தியா சீனா உறவு
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாகவே மோதல் போக்கே நிலவி வந்தது. கல்வான் மோதலுக்குப் பிறகு இரு தரப்பிற்கும் இடையே எல்லையில் மோதல் போக்கே நிலவி வந்தது. இரு நாட்டு வீரர்களும் வீரர்களையும் குவித்ததால் எல்லையில் போர் சூழலும் கூட ஏற்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாகவே நிலைமையைச் சரி செய்யத் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் அதற்குப் பெரியளவில் பலன் கிடைக்கவில்லை.
கடந்த ஆண்டு ரஷ்யாவில் நடந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியைச் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்தார். அதன் பிறகே இரு தரப்பிற்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வந்தது. கிழக்கு லடாக்கில் இருந்து இரு தரப்பும் வீரர்களை வாபஸ் பெற்றன. நிலைமை மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியது. இந்தச் சூழலில் தான் சீனா இப்போது இந்தியாவுக்கு நேரடியாக அழைப்பு விடுத்துள்ளது. இந்த மாற்றத்திற்குக் காரணம் டிரம்ப்.. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இதுவரை 10% வரி வசூலிக்கப்பட்டது. அதை 20%ஆக உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டார். இது சீனா வர்த்தகர்களைக் கடுமையாகப் பாதிக்கும்.
பதிலடி கொடுக்கும் சீனா
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க விவசாயப் பொருட்கள் மீது சீனா வரியை அறிவித்தன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வர்த்தக போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தான் சீனா இந்தியாவிடம் நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளது. இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பதற்குப் பதிலாக ஆதரித்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் இந்த பரஸ்பர ஒத்துழைப்பு இரு தரப்பிற்குமே நன்மையைத் தரும் என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி தனது உரையில் வலியுறுத்தினார்.
சீன அமைச்சர்
சீனா- இந்தியா உறவுகள் வலுவடைவதால் ஏற்படும் சர்வதேச தாக்கம் குறித்துப் பேசிய சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, இரு நாடுகளின் ஒற்றுமை என்பது சர்வதேச ஜனநாயகத்தை மேம்படுத்தும் என்றும் உலக அரங்கில் தென்கிழக்கு ஆசியாவின் நிலைப்பாட்டை வலுப்படுத்தும் என்றும் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களை ராஜதந்திர பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்றும் பொதுவான இலக்குகளை அடையே ஒத்துழைப்பு முக்கிய என்றும் வாங் யி வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், "பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியாத எந்தப் பிரச்சினையும் இல்லை.. ஒத்துழைப்பால் அடைய முடியாத எந்த இலக்குகளும் இல்லை.. இருதரப்பு உறவு மேம்பட ஆக்கப்பூர்வமான அணுகுமுறை தேவை" என்றார்.
ஏன் முக்கியம்
சீனாவின் இந்தக் கருத்துகள் முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சீனா இந்தளவுக்கு ஆர்வம் காட்டியது இல்லை.. வெளிப்படையாக அழைப்பு விடுத்ததும் இல்லை. ஆனால், இப்போது அமெரிக்கா தாறுமாறாக வரிகளை விதிக்க தொடங்கியுள்ள நிலையில், தனது வாய்ஸை வலுப்படுத்த இந்தியாவுடன் இணைந்து செயல்படச் சீனா விரும்புவதையே காட்டுகிறது.
முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் ஜி20 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் மீட்டிங் நடைபெற்றது. அதில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி மற்றும் நமது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இடையே தனியாக மீட்டிங் நடந்தது. சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த மீட்டிங்கில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் நிலவும் சூழல் தொடங்கி பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒரே புள்ளியில் இணையும் சீனா இந்தியா?
ஏற்கனவே கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் டிரம்ப் நடவடிக்கையால் அதிருப்தியில் உள்ளது. ஒருவேளை டிரம்ப் திட்டமிட்டபடி ஏப்ரல் 2ம் தேதி ரெசிப்ரோகல் வரியை அறிவித்தால் அதற்குப் பதிலடி கொடுக்கும் திட்டத்தை நிச்சயம் இந்த நாடுகள் வைத்திருக்கும் என்றே தெரிகிறது. இந்த நேரத்தில் உலகின் அதிக மக்கள்தொகையைக் கொண்ட இரு முக்கிய நாடுகள் ஒரே புள்ளியில் இணைவது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications