பழக்கதோஷத்துல ஜிகர்தண்டா கேட்காதீங்க.. மதுரையில் இருந்து அபுதாபி கிளம்பிய விமானத்தில் விமானி கலகல
மதுரை: மதுரை விமான நிலையத்தில் இருந்து அபுதாபி விமான நிலையத்துக்கு நேரடி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் நேற்று தொடங்கியது. மதுரையைச் சேர்ந்த விமானி தான் விமானத்தை இயக்கியுள்ளார். விமானம் புறப்படுவதற்கு முன்பு பயணிகளிடம் சகஜமாக உரையாடிய அவர், நம்ம ஊர்தான் என்று ஜிகர்தண்டா, பருத்தி பால் எல்லாம் கேட்காதீங்க என்று கூறிய சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் மாவட்டங்களில் மதுரை உள்ளது. தென் தமிழகத்தில் இதயமாக கருதப்படும் மதுரை தொழில்துறையில் சீரான வளர்ச்சியை எட்டி வருகிறது. இதனால் கோவையுடன், மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது.

மதுரையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் அந்த மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. மதுரை விமான நிலையத்தின் போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. சராசரியாக மாதம் 80,000 - 1,10,000 பயணிகள் மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
மதுரையில் இருந்து துபாய் மற்றும் இலங்கைக்கு மட்டுமே விமானங்கள் இயங்கி வந்தன. இதையடுத்து இண்டிகோ நிறுவனம் சார்பில் மதுரையில் இருந்து அபுதாபிக்கு விமான சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று இந்த சேவை தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக நேற்று அபுதாபியில் இருந்து மதுரைக்கும், பிறகு மதுரையில் இருந்து அபுதாபிக்கும் விமானம் சென்றது. இது மதுரை மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விமானம் வாரத்தில் 3 நாட்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமை, புதன் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் இந்த விமான சேவையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நாட்களில் காலை 7.20 மணிக்கு அபுதாபியில் இருந்து புறப்பட்டு, மதியம் 1.05 மணிக்கு மதுரை வந்து சேரும். மறு மார்க்கமாக மதுரையில் இருந்து மதியம் 2.35 மணிக்கு புறப்பட்டு அபுதாபிக்கு மாலை 5.20 மணிக்கு சென்றடையும்.
முதல்முறையாக மதுரையில் இருந்து நேரடியாக அபுதாபிக்கு விமான சேவை தொடங்கப்பட்டிருப்பது மதுரை மக்கள் மற்றும் தொழில்துறையினரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் அகமதாபாத் விமான விபத்து காரணமாக நேற்று இந்த விமான சேவைக்கு கொண்டாட்டம், வரவேற்பு போன்றவை எதுவும் இல்லாமல் தொடங்கப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த விமானி தான் இந்த விமானத்தை இயக்கினார். முன்னதாக விமானம் புறப்படுவதற்கு முன்பு அவர் பயணிகளிடம் பேசும்போது, "கதவை சாற்றிவிட்டு கிளம்பிவிடுவோம். சுமார் 3,000 கி.மீ தொலைவில் 4 மணி நேரம் பயணித்து அபுதாபியை அடைவோம். விமான சேவையை நன்கு என்ஜாய் செய்யுங்கள். நம்ம ஊர் விமானம் என்று ஜிகர்தண்டா, பருத்தி பால் எல்லாம் கேட்காதீர்கள். அது இங்கு கிடைக்காது.
நாம் புறப்படுவதற்கு தயாராகிவிட்டோம். எந்த உதவிகள் தேவைப்பட்டாலும் எங்களிடம் கேளுங்கள். உங்களுக்கு உதவி செய்வதற்காக நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் நன்றி. வணக்கம் என்று தமிழில் கூறினார். விமானத்தில் இருந்த பயணிகளும், முதல் விமானத்தை மதுரையைச் சேர்ந்த நீங்கள் இயக்குவது எங்களுக்கு கௌரவமாகவும், பெருமையாகவும் உள்ளது." என்று கூறினர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications