துபாய்: பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த முகம்மது - 1116 மதிப்பெண்கள் பெற்று சாதனை
துபாய்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழை முதன்மை பாடமாக எடுத்து படித்த துபாய் கிரசண்ட் ஆங்கில உயர்நிலைப் பள்ளி மாணவர் முகம்மது குப்தீன் ஜாபர்அலி 1116 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் கிரசண்ட் ஆங்கில உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தமிழில் முதல் பாடமாக கொண்டு 20 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

இந்த தேர்வை தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை நடத்துகிறது. இங்கிருந்து ஆசிரியர்கள் சென்று தேர்வை நடத்தி முடித்த பின்னர் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தமிழகம், புதுச்சேரி போன்று துபாயில் தேர்வு எழுதிய 20 மாணவர்களில் 19 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 95 சதவீதமாகும்.
இதில் மாணவர் முகம்மது குப்தீன் ஜாபர்அலி 1116 மதிப்பெண் பெற்று முதலிடம் வகித்தார். ரஷிதா 1059 மார்க் எடுத்து 2-வது இடமும், ஆயிஷா 1045 மார்க் பெற்று மூன்றாவது இடமும் பெற்றனர். இந்த பள்ளியில் அரபிக் உள்ளிட்ட பிற மொழிப் பாடங்கள் இருந்தபோதிலும் தமிழ் மாணவர்கள் தமிழை முதன்மை பாடமாக எடுத்து படித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
வணிகவியல் பாடம்
துபாயில் வாழும் தமிழர்களுக்காக, தமிழர்களால் நடத்தப்பட்டு வரும் கிரசண்ட் பள்ளியில் தற்போது கலைப் பிரிவு வகுப்புகள் அதாவது, வணிகவியல், கணக்குப் பதிவியல் போன்ற பாடத்திட்டங்கள் மட்டுமே பனிரெண்டாம் வகுப்பில் நடத்தப்பட்டு வருகிறது. அறிவியல் பாடங்களுக்கு செயல்முறைத் தேர்வு நடத்த சிரமம் என்பதால் இன்னும் அந்த பாடங்கள் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் வந்தது எப்படி?
பிளஸ் 2 மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் குறித்த செய்திகளில் துபாய் இடம்பெற்றிருப்பதை பார்த்த சிலர் துபாய் எப்போது மாவட்டத்தில் சேர்ந்தது என்று குழப்பம் அடைந்தனர். சமூக வலைத்தளங்களிலும் சிலர் கிண்டலடித்து பதிவிட்டனர். துபாயில் இருந்தும், தமிழ் பாடத்தில் தேர்வெழுத வசதி வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது இதன் மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications