'ஜெட்’ வேகத்தில் அழியும் உயிரினங்கள்... பூமியின் 6வது பெரிய பேரழிவு தொடங்கியது!
வாஷிங்டன் : பூமியில் 6வது மிகப்பெரிய அழிவு தொடங்கி விட்டதாகவும், முன்னைக் காட்டிலும் உயிரினங்கள் 100 மடங்கு வேகத்தில் அழிந்து வருவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் ஆய்வாளர்கள்.
மனிதனின் தேவைக்காக இயற்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறான். ஆனால், இயற்கை அழிய அழிய மனிதனும் அழியத் தொடங்குகிறான் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.
அந்தவகையில், உலகத்தில் ஆறாவது அழிவு அரங்கேறிக் கொண்டிருப்பதாக எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஆராய்ச்சியாளர்கள்...
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி ஆகியவற்றை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தான் தங்களது ஆய்வு மூலம் இதனைத் தெரிவித்துள்ளனர்.

டைனோசர்கள்...
கடந்த 65 மில்லியன் வருடங்களுக்கு முன் பூமியில் இருந்து டைனோசர்கள் முற்றிலும் அழிந்ததை பூமியின் 5வது பேரழிவு எனக் கூறும் விஞ்ஞானிகள், தற்போதுதான் பூமியை சேர்ந்த உயிரினங்கள் வேகமாக மறைந்து வருவதை 6வது பேரழிவு என்கின்றனர்.

மனிதர்கள் தான் காரணம்...
இந்த 6வது பேரழிவிற்கு முக்கியக் காரணம் மனிதர்கள் தான் எனக் குற்றம் சாட்டுகின்றனர் விஞ்ஞானிகள். காடுகள் அழிக்கப்படுவதும், மாசுபாடு காரணமாக காலநிலை மாற்றத்தினால் உயிர் இனங்கள் வேகமாக அழிந்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

பேரழிவு...
அதேபோல், ஒரு முறை பேரழிவு ஏற்பட்டால் அதிலிருந்து மீண்டு வர பல மில்லியன் வருடங்கள் ஆகும் என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள், இந்த வேகம் நீடித்தால் அடுத்த சில நூற்றாண்டுகளில் எல்லா விலங்கினங்கள் மட்டுமல்ல, மனித இனமும் கூட வெகுவாக அழியும் ஆபத்து உள்ளது என்கின்றனர்.

ஆய்வு முடிவுகள்...
பல நாடுகளில் கிடைத்த விலங்கின எலும்பு கூடுகள், படிமங்கள் உட்பட பல்வேறு ஆதாரங்கள் மூலம் இந்த ஆய்வு முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications