மீண்டும் மீண்டும் மரண ஓலம்.. மீள்வதற்குள்ளேயே இன்னொரு நிலநடுக்கம்.. துரத்தியடிக்கும் துருக்கி துயரம்
துருக்கியில் 5.5 என்ற ரிக்டர் அளவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு, அம்மக்களை கதிகலங்க வைத்து வருகிறது
அங்காரா: கடந்த 6ம் தேதி துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுமார் 45 ஆயிரம் பேரை பலி கொண்ட நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
துருக்கியில் கடந்த 6ம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிய நிலையில் மீட்பு படையினர் மக்களை மீட்டனர். ஆனால் அன்று மாலையே மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. இதில் சுமார் 16 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மொத்தமாக துருக்கியில் மட்டும் சுமார் 44,218 பேரும், சிரியாவில் 5,914 பேரும் பலியாகினர். இது உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாக இந்த நிலநடுக்கம் பார்க்கப்படுகிறது. இந்த இழப்பிலிருந்து துருக்கி மீண்டு வர இன்னும் ஒரு சில ஆண்டுகள் வரை ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. நாட்டின் அனைத்து விளையாட்டு மைதானங்களும் வீடற்றவர்களின் தங்குமிடமாக மாறியிருப்பதால் உடனடியாக தற்போது 15 லட்சம் பேருக்கு சுமார் 5 லட்சம் வீடுகள் தேவைப்படுகிறது. இது தவிர மீதமுள்ளோருக்கும் வீடுகள் தேவைப்படுகின்றன.
எனவே இவையெல்லாவற்றிற்கும் ரூ.82 ஆயிரம் கோடி செலவாகிறது. அதாவது இவ்வளவு பெரிய தொகையை கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் பட்ஜெட்டை தயாரித்துவிடலாம். எனவே இவ்வளவு பெரிய தொகையை உடனடியாக திரட்டுவது என்பது துருக்கிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் வர இருப்பதால் அதற்கான செலவுகள் வேறு ஒரு பக்கம் இருக்கிறது. எனவே தற்போது துருக்கியின் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. சொல்லப்போனால் உண்மையான சேதம் இன்னும் கணக்கிடப்பட்டு முடிக்கப்படவில்லை.
தற்போது வரை தெரிந்திருப்பது வெளிப்படையான சேதங்களின் விவரங்கள் மட்டுமே. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வணிக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இனி வரும் காலங்களில் வேலையின்மை, உற்பத்தி பாதிப்பு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு என நாட்டின் வருமானம் பாதிக்கப்படும். எனவே இந்த இரண்டாவது பாதிப்பு எதிர்பார்ப்பதை விட அதிகமாகவும், நீண்ட காலத்திற்கும் நீடிக்கும். எனவே இதனை இந்த இரண்டு பாதிப்புகளையும் சரி செய்ய அந்நாட்டு அரசு போராடிக்கொண்டிருக்கிறது. இதற்கு உதவியாக சர்வதேச நாணய நிதியம் உதவியை அறிவித்திருக்கிறது.
தற்போது கட்டிட இடிபாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் அறிவிப்பின்படி மத்திய துருக்கியில் பூமியிலிருந்து சுமார் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 5.5ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் இப்பகுதியில் இருந்த கட்டிடங்களை குலுக்கியுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications