கண்ணில் போன பார்வை பல் மூலம் திரும்பிய அதிசயம்
லண்டன்: இங்கிலாந்தில் கண்ணில் அடிபட்டு பார்வை பறிபோன ஒருவருக்கு பல்வழியே உலகத்தை பார்க்கும் அதிசயம் நிகழ்ந்துள்ளது.
1998-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் இயன் டிபெட்ஸ் (43) என்ற தொழிலாளியின் வலது கண்ணில் இரும்பு துண்டு பாய்ந்தது. அடிப்பட்ட கண்ணில் அடிக்கடி வலியுடன் நீர் வடியும் நிலையில் அவர் மிகவும் அவதிப்பட்டு வந்தார். நாளடைவில், அந்த கண்ணின் பார்வை சுத்தமாக பறிபோனது. இதனால் அவர் வேலையை விட்டு நிற்க வேண்டிய பரிதாப சூழ்நிலை ஏற்பட்டது.
அவரது இடது கண்ணின் பார்வையும் ஓரிரு ஆண்டில் பறிபோனதால், உலகமே இருண்டுபோனது. வாழ்க்கையே சூனியமாகவிட்டதோ என்று வருத்தப்பட்ட அவருக்கு கைகொடுத்துள்ளார் ஒரு கண் டாக்டர் ஒருவர்.
புரட்சிகரமான ஓர் அறுவை சிகிச்சையின் மூலம் இயான் டிபெட்சுக்கு மீண்டும் கண்ணொளியை ஏற்படுத்த லண்டனில் உள்ள சுசெக்ஸ் கண் ஆஸ்பத்திரியின் பேராசிரியர் கிரிஸ்டோபர் லியு முடிவு செய்தார்.
இதன்படி, அவரது தாடையின் ஒரு பகுதியையும், முன் பல்வரிசையில் ஒன்றையும் டாக்டர்கள் அகற்றினர்.தாடையை தொட்டிலாக்கி, அதில் பல்லை இணைத்து அவரது கன்னப் பகுதியில் பொருத்தி விட்டனர். அந்த பல்லில் அதிநவீன காண்டாக்ட் லென்சை இணைத்து 3 மாதங்களுக்கு அப்படியே விடப்பட்டது.
இதற்கிடைப்பட்ட காலத்தில் அந்த புதிய இணைப்பில் திசுக்களும் ரத்த நாளங்களும் வளரத் தொடங்கின.
அதை அப்படியே மொத்தமாக எடுத்து அவரது வலது கண்ணுக்குள் திணித்து, மூளைக்கு செல்லும் நரம்பு மண்டலத்திற்கு இணைப்பு வழங்கப்பட்டது.
இந்த நவீன அறுவை சிகிச்சை நடந்த சில வாரங்களில் கண்ணொளி திரும்பப் பெற்று பழைய மனிதராக இயான் டிபெட்ஸ் தற்போது நடமாட தொடங்கி விட்டார்.












Click it and Unblock the Notifications