துருக்கி அதிபருக்கு யார் எதிரி.. யாருக்கு அவர் எதிரி.. பளிச் பருந்து பார்வை
இஸ்தான்புல்: துருக்கி அதிபர் ரெசப் தாயிப் எர்டோகன் ஆட்சிக்கு எதிராக ஏன் இந்த திடீர் ராணுவ புரட்சி என்பதை அறிந்து கொள்ள அவருக்கு யார் நண்பர்கள், யார் எதிரிகள் என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம்.
அதுகுறித்த ஒரு பருந்துப் பார்வை இதோ:
எகிப்தில் அரசுக்கு எதிரான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திற்கு எர்டோகன் ஆதரவு அளித்தார்.
சிரியா நாட்டு அதிபர் பஷர் அல்-ஆசாத் எர்டோகனுக்கு ஆகாதவர். பஷருக்கு எதிரான குழுக்களுக்கு எர்டோகன் ஆதரவு அளித்தார். எனவே, அல்-ஆசாத்துக்கு ஆதரவான ஈரானும், லெபனானும் எர்டோகனை எதிராக கருதி வருகின்றன.
சிரியாவில் அல் ஆசாத்துக்கு எதிரான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந் நிலையில் சில மாதங்களுக்கு முன் ரஷ்யாவின் எஸ்யூ-24 ரக விமானம், துருக்கி எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக சுட்டு வீழ்த்தப்பட்டது. எனவே ரஷ்ய அதிபர் புடினுக்கு, எர்டோகன் ஜென்ம பகைவனாகினார்.
துருக்கி மக்கள் தொகையில் குர்து இன மக்கள் 20 சதவீதம் உள்ளனர். ஆனால் அவர்களது உரிமைகளை எர்டோகன் அரசு பறித்து வருவதோடு, வாழ்வாதாரத்தையும் பறித்து வருகிறது. இதனால் அவர்களும் எர்டோகனை வெறுக்கிறார்கள்.