வெப்ப அலையால் கொதிக்கும் ஐரோப்பிய நாடுகள்.. ஈஃபிள் டவர் மூடல்! பிரான்சில் பள்ளிகள் மூடல்!
பாரிஸ்: ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலை மக்களைத் திணறடித்து வருகிறது. வரும் நாள்களில் கடுமையாகும் என எச்சரிக்கை வெளியாகியுள்ளது. பிரான்ஸ் முதல் சுவிஸ் வரை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலை காரணமாக, ஈஃபிள் கோபுரத்தின் உச்சிப் பகுதி மக்களின் பாதுகாப்பு கருதி வரும் இரண்டு நாள்களுக்கு மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில், ஐரோப்பாவின் பல பகுதிகள் கோடை மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் கொளுத்தியது. புவி வெப்பமடைதலே இதற்கு காரணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலை காரணமாக சுட்டெரித்து வருவதால், இத்தாலி, சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்சின் சில பகுதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.
இங்கிலாந்தின் லண்டனில் உள்ள செயிண்ட் ஜேம்ஸ் பூங்காவில் 34.7 டிகிரி செல்சியஸ்வெப்பநிலை பதிவானது, இது இதுவரை இந்த ஆண்டின் வெப்பமான நாளாக பதிவாகியுள்ளது. திங்கட்கிழமை, லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் 33.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
ஜெர்மனியில் வெப்பநிலை அரிதாக 40 டிகிரி செல்சியஸை எட்டும். இந்த வாரம் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை (104 டிகிரி பாரன்ஹீட்) தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஜெர்மன் வானிலை சேவை மையம் தெரிவித்துள்ளது.
பிரான்சில் பாரிஸ் உட்பட 16 துறைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸை (105 டிகிரி பாரன்ஹீட்) எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்ப அலை காரணமாக, ஈஃபிள் கோபுரத்தின் உச்சிப் பகுதி மக்களின் பாதுகாப்பு கருதி வரும் இரண்டு நாள்களுக்கு மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரின் வசதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் 1,300 க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மருத்துவமனைகள் வெப்ப அலை காரணமாக பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலியில் கோடை வெப்பம் அதிகமாக இருந்ததால், புளோரன்ஸ், பெர்கமோ உள்ளிட்ட பல நகரங்கள் செவ்வாய்க்கிழமை கடும் மின் தடையால் பாதிக்கப்பட்டன. சில இடங்களில் டிராபிக் சிக்னல்கள் மின் பற்றாக்குறையால் வேலை செய்யவில்லை. வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின் தடையால் பணிகள் பாதிக்கப்பட்டன.
இந்த கோடைக் காலத்தின் மிகப்பெரிய வெப்ப அலையை ஐரோப்பிய நாடுகள் எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. வெப்ப அலை காரணமாக க்ரீஸ், பிரான்ஸ், போர்த்துக்கல், துருக்கியில் காட்டுத் தீ ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications