ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்தால்.. எப்படி இது நடக்கும்? பாகிஸ்தான் மாஜி வீரர் அப்துல் ரசாக் சர்ச்சை
இஸ்லாமாபாத்: உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ள நிலையில் முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் கூறிய கருத்து தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கி நடந்து வந்தது. தற்போது லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் ஒவ்வொரு அணிகளும் 9 போட்டிகளிலும் மோதின. இந்தியா, சவுத் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

மீதமுள்ள 6 அணிகள் வெளியேறி உள்ளன. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து அணிகள் லீக் சுற்றோடு வெளியேறி உள்ளன. பாகிஸ்தான் அணியை பொறுத்தமட்டில் 9 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று 8 புள்ளிகளோடு 5வது இடம் பிடித்து வெளியேறியது.
நடப்பு 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அது நடக்கவில்லை. இதனால் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஷாகித் அப்ரிடி, அப்துல் ரசாக், உமர் குல் ஆகியோர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர்.
அந்த நிகழ்ச்சியில் 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து அப்துல் ரசாக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‛‛யூனிஸ் கான் நல்ல கேப்டனாக இருந்தார். இது எனக்கு உத்வேகத்தையும், உறுதியையும் வழங்கினார். இப்போது இங்கு இருக்கும் அனைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி குறித்து பேசி வருகிறோம்.
Shameful example given by Abdul Razzaq. #AbdulRazzaq #CWC23 pic.twitter.com/AOboOVHoQU
— Shaharyar Ejaz 🏏 (@SharyOfficial) November 13, 2023
உண்மையில் நாங்கள் பாகிஸ்தானில் வீரர்களை உருவாக்கி அவர்களை மெருகூட்டி விளையாட வைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் எல்லாம் எங்களுக்கு இல்லை. ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்டால் நல்ல மற்றும் பக்தியுள்ள குழந்தை பிறக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது மட்டும் நடக்காது'' என தெரிவித்தார்.
அதாவது பாகிஸ்தான் அணி முன்பு நன்றாக செயல்பட்டது. இப்போது அந்த அணி சரியாக செயல்படவில்லை என அனைவரும் கூறி வரும் நிலையில் முந்தைய அணியையும் இந்த அணியையும் ஒப்பிட வேண்டாம் எனும் வகையில் அந்த நாட்டு வீரர்கள் தேர்வு வாரியத்தை சீண்டும் வகையில் ஐஸ்வர்யாராயை உவமையாக்கி அப்துல் ரசாக் இப்படி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கேட்டவுடன் அருகே இருந்த ஷாகித் அப்ரிடி மற்றும் உமர் கில் ஆகியோர் கைத்தட்டி பாராட்டினர்.
தற்போது அப்துல் ரசாக்கின் கமெண்ட் மற்றும் அப்ரிடி, உமர் குல் ஆகியோர் கைத்தட்டி பாராட்டியது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதற்கு தற்போது பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது பற்றி எம்எல்பி என்ற பெயர் கொண்டவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛இவர்கள் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.
அனைத்து இடங்களுக்கும் பயணம் செய்துள்ளனர். வெவ்வேறு இனம், காலசாரம், மதநம்பிக்கைகளை சேர்ந்த மக்களை சந்தித்துள்ளனர். ஆனாலும் அவர்களின் அறிவு இதுதான். ஒவ்வொரு நாளும் தங்களை சங்கடமான நிலையில் வைத்து கொள்ள அவர்களே காரணங்களை வழங்குகின்றனர்'' என விமர்சனம் செய்துள்ளார்.
அதேபோல் டாக்டர் சமரா அப்சல் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛இது அருவருப்பான பேச்சு. வெட்கக்டோனது. அப்துல் ரசாக் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. இதனால் 2 முறை வேற கேட்டுவிட்டேன்'' என விமர்சனம் செய்துள்ளார். இதேபோல் பலரும் அப்துல் ரசாக்கை விமர்சனம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications